இந்தியர்களை வேலைக்கு எடுக்காதீங்க.. கூகுள், ஆப்பிளுக்கு டிரம்ப் எச்சரிக்கை! காரணம் இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற டெக் நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய ஐடி ஊழியர்களுக்கு வேலை வழங்குவதை குறைப்பது முக்கியம் என்றும் அவர் டெக் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அந்த நிகழ்வில் டிரம்ப் பேசியதாவது, "அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து, இந்தியாவில் ஊழியர்களை நியமித்து, அயர்லாந்தில் லாபத்தை பதுக்கி வைத்திருக்கின்றன. இனி அப்படி செய்ய முடியாது. அதற்கான நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன. உள்நாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான புதிய நடவடிக்கைகள்
டிரம்ப், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை மேம்படுத்தும் மூன்று முக்கிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தை துரிதப்படுத்த தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்குவதாகும். ஏஐ வளர வேண்டும் எனில், டேட்டா சென்டர்கள் அவசியம். எனவே, இந்த திட்டம் டேட்டா சென்டர்களின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், தேவையான உள்கட்டமைப்பை எளிதாக்கும்.
மற்றொரு உத்தரவு, அரசு நிதி பெறும் டெக் நிறுவனங்கள், அரசியல் ரீதியாக நடுநிலையான செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது ஏஐ தொழிலநுட்பத்தில் 'வோக்' பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. முற்போக்கு தகவல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் AI-ஐதான் இப்படி சொல்கிறார்கள். இப்படியான ஏஐ-க்களை தனது நிர்வாகம் ஆதரிக்காது என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். பைடன் காலத்தில் வகுக்கப்பட்ட கொள்கைகள் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தை தடை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கான முன்னுரிமைகள்
"அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும். நாங்கள் கேட்கும் ஒரே விஷயம் அமெரிக்காவை முதன்மைப்படுத்துவதுதான். செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் துல்லியமாகவும் பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும்" என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மூன்றாவது உத்தரவு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது. இது உலகளவில் போட்டியிடுவதற்கான ஆதரவையும் வழங்குகிறது. அதாவது டெக் உலகில் சீனா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது. எனவே சீனாவுக்கு சவால் விடும் வகையில், அதன் ஆதிக்கத்தை குறைக்கும் வகையிலும், அமெரிக்கா தீயாய் வேலை பார்க்க ரெடியாகி வருகிறது. இதற்கு ஏற்ப டெக் வணிக கொள்கைகளை டிரம்ப் மாற்றி வருகிறார்.
இந்திய தகவல் தொழில்நுட்ப துறைக்கு எதிர்கால சவால்கள்
இந்த மாற்றங்கள் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் அதிக தடைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இது இந்திய தகவல் தொழில்நுட்ப துறைக்கு ஒரு முக்கியமான சவாலாக இருக்கலாம் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications