கழுதைப்புலிகள் ஆபத்து? குனோ பூங்கா சீட்டாக்களுக்கு உகந்த இடம்தானா? சந்தேகம் கிளப்பும் நிபுணர்கள்
வாஷிங்டன்: நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட 8 சீட்டாக்களும் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளன. இந்தநிலையில், இந்த பூங்கா சீட்டாவிற்கு தகுந்த வாழ்விடமாக இருக்குமா? என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர் வல்மிக் தபார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 1952-ஆம் ஆண்டுக்கு பின்னர் சீட்டாக்கள் என்ற சிறுத்தைப்புலிகள் இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் சீட்டாக்களை இந்தியாவில் வளர்க்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து 8 சீட்டாக்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

8 சீட்டாக்கள்
அதன்படி பிரதமர் மோடியின் பிறந்தநாளான நேற்று 5 ஆண் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் சிறப்பு விமானம் மூலம் நமீபியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து இந்த 8 சீட்டாக்களையும் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விட்டார். பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தபடி, பிரதமர் மோடி மரக்கூண்டுகளில் வைத்து கொண்டுவரப்பட்டிருந்த சீட்டாக்களில் 3 ஐ அவர் திறந்துவிட்டார். மற்ற 5 சீட்டாக்களை மற்ற அதிகாரிகள் காட்டில் திறந்துவிட்டனர்.

70 ஆண்டுகால..
எப்படியோ, இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு பின் சீட்டா வகை சிறுத்தைப்புலி இனங்கள் கால்பதித்துள்ளன. இதனால் 70 ஆண்டுகால குறை இந்தியாவில் தீர்ந்தது என்றே சொல்லலாம். எனினும் தற்போது இந்தியா கொண்டுவரப்பட்டுள்ள 8 சீட்டாக்களும் இங்குள்ள தட்ப வெப்பநிலைக்கு தகுந்தாற்போல் வாழ்ந்துவிடுமா என்றும் பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

எப்படி உணவளித்து வளர்க்கும்
குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் சீட்டாக்கள் விடப்பட்டுள்ள போதிலும், சீட்டாவிற்கு தகுந்த வாழ்விடமாக இந்த பகுதி இருக்குமா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை பட்டியலிட்டு தனது கவலைகளை சுற்றுச்சூழல் பாதுகாவலர் வல்மிக் தபார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- குனோ தேசிய வனவிலங்குகள் பூங்காக்கள் போதுமான இடவசதி அற்றதாக உள்ளது. வேட்டையாடுவதற்கும் போதுமான இடப்பற்றாக்குறையும் உள்ளதால் இந்த சீட்டாக்கள் எப்படி இந்த வனப்பகுதியில் உலவி வேட்டையாடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. தனது குட்டிகளை எப்படி உணவளித்து வளர்க்கும் என்ற கேள்வியும் எழுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கழுதைப்புலிகளும், சிறுத்தைகளும்
மேலும் அவர் கூறுகையில், ''இந்த வனவிலங்கு பூங்காவில் கழுதைப்புலிகளும், சிறுத்தைகளும் அதிக அளவில் உள்ளன. சீட்டாக்களுக்கு முக்கிய எதிரியாக இந்த விலங்குகளே உள்ளன. ஆப்பிரிக்காவில் நீங்கள் பார்த்தால், கழுதைப்புலிகள் சீட்டாக்களை துரத்தி கொல்லக்கூட செய்கின்றன. மேலும் இந்த பூங்காவை சுற்றிலும் 150 கிராமங்கள் உள்ளன. அங்கு நாய்களும் அதிக அளவில் உள்ளன. இவைகள் சீட்டாக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

ஓடுவதற்கு தகுந்த இடமா?
சீட்டாக்கள் வேகமாக ஓடுவதற்கு தகுந்த இடமாகவும் குனோ தேசிய பூங்கா இல்லை. ரந்தம்பூரில் இருந்து புலிகள் கூட இந்த பகுதிக்கு வருகின்றன. சிங்கங்களை இடமாற்ற முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். அதிக அளவில் புலிகள் வராவிட்டாலும் அதற்கான பாதையை மூட வேண்டியுள்ளது'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications