சர்வதேச ரூல்ஸை மீறிய இஸ்ரேல்? பரபர வார்னிங்.. அமெரிக்காவில் வெடிக்கும் புதிய பிரச்சினை! என்ன காரணம்
வாஷிங்டன்: காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் சர்வதேச விதிகளை மீறியிருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளது. முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அங்குக் காசா பகுதியில் ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழலில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் அளித்துள்ள ரிப்போர்ட் ஒன்று முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆயுதங்கள்: அதாவது இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்கா பல ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. இது இஸ்ரேல் ராணுவத்திற்கு மிக பெரிய உதவியாக இருந்து வருகிறது. அமெரிக்காவின் ஆயுதங்களைச் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படியே பயன்படுத்துவோம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. இருப்பினும், இஸ்ரேல் சொல்வது நம்பும்படியாக இல்லை என்று அமெரிக்க மூத்த அதிகாரிகள் சிலர் வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கனுக்கு ரிப்போர்ட் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது சர்வதேச சட்டங்களை மீறவில்லை என்ற உறுதிமொழியை பிளிங்கன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரும் மே 8ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் சில மூத்த அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேல் செயல்பாடுகளில் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
சர்வதேச ரூல்ஸ்: காசா போரில் இஸ்ரேல் ராணுவம் சர்வதேச சட்டத்திற்கு இணங்காதது கவலையை தருவதாக சில அதிகாரிகள் கூறியுள்ளனர். இஸ்ரேல் எடுத்த 8 நடவடிக்கைகளை மேற்கொள் காட்டி அமெரிக்க அதிகாரிகள் இந்த சந்தேகத்தை எழுப்பினர்.
பாதுகாக்கப்பட்ட கட்டிடங்கள், பொதுமக்கள் இருக்கும் கட்டிடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், உரிய விசாரணை நடத்தத் தவறியது. அதிகப்படியான செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற காரணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். மேலும், மனிதாபிமான ரீதியாக அனுப்பப்பட்ட உதவிகளை 11 முறை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு பிரச்சினை: அதேநேரம் அமெரிக்கா தனது ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை நிறுத்தினால் அது இஸ்ரேல் தன்னை தானே பாதுகாக்கும் திறனைக் கட்டுப்படுத்தும் என்றும் மற்றொரு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கு அனுப்பும் ஆயுதங்களை அமெரிக்கா நிறுத்தினால் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான பிளிங்கன் தரப்பு இதுவரை செய்தியாளர்களிடம் பேசும் போது இஸ்ரேல் எந்தவொரு சர்வதேச விதிகளையும் மீறவில்லை என்றே தொடர்ந்து கூறி வந்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் சில மூத்த அதிகாரிகளே இஸ்ரேல் சர்வதேச விதிகளை மீறி இருக்கலாம் எனக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தொடரும் மோதல்: கடந்த அக். 7ஆம் தேதி முதலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும், இந்த காசா தாக்குதலில் இதுவரை 34,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவல் இஸ்ரேலுக்குச் சர்வதேச அழுத்தங்களை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications