காசாவில் அமைதி திரும்புகிறதா.. டிரம்பின் நடவடிக்கைக்கு இஸ்ரேல் க்ரீன் சிக்னல்.. முடிவு ஹமாஸ் கையில்
வாஷிங்டன்: காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தான் போரை போல, இந்த பிரச்சனைக்கும் அமெரிக்கா தான் பஞ்சாயத்து பேசி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று சந்தித்தனர். அப்போது காசாவில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக டிரம்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்வதாக நெதன்யாகு அறிவித்துள்ளார். இதன்மூலம் காசாவில் அமைதித் திரும்புவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம் காசா. இஸ்ரேல் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக காசா மீது போர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லி இஸ்ரேல் அத்துமீறி வருவதாக புகார் உள்ளது. இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று சுமார் 65,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.

காசா போர் நிறுத்தம்
இதற்கு உலகளவில் பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பாலஸ்தீனிய மக்களுக்கு நீதி கேட்டு உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேலின் போர் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல இந்தப் பிரச்சனைக்கும் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நெதன்யாகு நேற்று டிரம்பை சந்தித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை செய்தார். முன்னதாக காசா போர் நிறுத்தம் செய்வதற்காக டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாகத்தான் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை செய்தனர்.
இஸ்ரேல் ஒப்புதல்
இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்பே டிரம்ப் செய்தியாளர்களிடம், "நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது." என கூறி சென்றார். ஆலோசனைக்கு பிறகு அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், "காசாவில் போர் நிறுத்தம் மற்றும் அமைதியை நிலைநிறுத்துவது தொடர்பான 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். அவருக்கு நன்றி.
இதனால் காசாவில் மீண்டும் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பு இந்த 20 அம்ச திட்டங்களை ஏற்க வேண்டும். அவர்கள் இதை நிராகரித்தால், அவர்களின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுப்போம். சிறப்பான, முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்திற்காக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வரலாற்றின் முக்கிய நாள்." என்றார்.
ஹமாஸ் முடிவு
பிறகு பேட்டியளித்த நெதன்யாகு, "டிரம்பின் போர் நிறுத்தம் நடவடிக்கை எங்களின் இலக்குடன் பொருந்துகிறது. எங்களின் அனைத்து படைகளையும் திருப்பிக் பெற்றுகொள்கிறோம். காசா மூலம் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் கொடுக்காது என்று நம்புகிறோம். இதை ஹமாஸ் ஏற்றுக்கொண்டால் உடனடியாக அடுத்த 72 மணி நேரத்திற்குள் அனைத்தையும் திரும்ப பெற்று கொண்டு அமைதி திரும்ப பாடுபடுவோம்." என்றார்.
டிரம்பின் 20 அம்ச திட்டப்படி, போர் நிறுத்தம், காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுதல், பிணைக்கைதிகளை விடுவித்தல், ஹமாஸ் குழு ஆயுதங்களை கைவிடுதல், காசாவை மீளுருவாக்கம் செய்தல், டிரம்ப் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன. தற்போது ஹாமாஸின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications