"அடுத்த பெருந்தொற்று!" கொரோனாவை விட ரொம்ப மோசம்.. நடுத்தர வயதினர் மொத்தமாக காலி? பகீர் தகவல்
வாஷிங்டன்: கொரோனாவின் கோரத் தாண்டவம் முடிவுக்கு வந்து நாம் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ள நிலையில், மற்றொரு பெருந்தொற்று நம்மை ஏற்கனவே தாக்கத் தொடங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா எந்தளவுக்கு ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். உலக மக்களை வீடுகளிலேயே முடக்கிய கொரோனா, பலரைக் கொத்து கொத்தாகக் கொன்றது.

கொரோனாவால் சில ஆண்டுகள் வரை நாம் இழந்துவிட்டோம். அதன் பின்னரே இப்போது நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறோம். இதற்கிடையே இந்த உலகை அடுத்த பெருந்தொற்று தாக்க ஆரம்பித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த பெருந்தொற்று: அதுதான் தனிமை.. பல தலைமுறைகளாகத் தனிமை என்பது பலரையும் மிக மோசமாகப் பாதிக்கும் ஒன்றாக மாறி வருகிறதாம். அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இது கடுமையாகப் பாதிக்கிறது. குறிப்பாக 45 முதல் 65 வயதான நடுத்தர வயதான நபர்களையே இது கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 2002 முதல் 2020 வரை அமெரிக்கா மற்றும் 13 ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை அவர்கள் எந்தளவுக்குத் தனிமையாக உணர்கிறார்கள் என்பதைப் பதிவு செய்து வைத்துள்ளனர். இதில் தான் அமெரிக்காவில் இப்போது நடுத்தர வயது ஆண்கள் அதீத தனிமையில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இது அமெரிக்காவுக்கு மட்டும் நடக்கும் விஷயம் இல்லை. ஐரோப்பாவிலும் கூட நடுத்தர வயது ஆண்கள் அதிக தனிமையை உணர்கிறார்களாம்.
ஏன் முக்கியம்: நடுத்தர வயதுடையவர்கள் தான் எந்தவொரு சமூகத்திற்கும் ரொம்பவே முக்கியமானவர்கள்.. உழைக்கும் வயதில் இருக்கும் இவர்கள் தான் பல நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். ஆனால் அவர்கள் இன்று அதிக சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் வயதான பெற்றோர் மற்றும் அவர்களது குழந்தைகள் என இரு தரப்பையும் பார்த்துக் கொள்ள வேண்டி இருப்பதால் அது அவர்களுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
தனிமை: தனிமை என்பது நமது ஆரோக்கியத்தை மிக கடுமையாகப் பாதிக்கிறது. புகைபிடிப்பதற்கு இணையான பாதிப்பைத் தனிமை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தனிமை என்பது மனச்சோர்வு, நாள்பட்ட நோய் அவ்வளவு ஏன் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
தனிமை என்பது சர்வதேச அளவில் பல கோடி பேரைப் பாதிக்கும் ஒரு மிகப் பெரிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. தனிமை என்பது தொற்றுநோயைப் போல மிக வேகமாக நமது சமூகத்தைப் பாதித்து வருவதாகவும் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தவில்லை என்றால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பாதிக்கும்: தனிமை என்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தப் பிரிட்டன் மற்றும் ஜப்பான் போன்ற பிற நாடுகள் இந்த பிரச்சினையைச் சரி செய்யத் தனியாக அமைச்சரவைகளைக் கூட உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இது உலகில் சில நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டதாகவும் வரும் காலங்களில் இது ஒட்டுமொத்தமாக உலகைக் கடுமையாகப் பாதிக்கும் ஒரு பெருந்தொற்றாக மாறும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.












Click it and Unblock the Notifications