Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!
வாஷிங்டன்: பசிபிக் கடலுக்கடியில் மிகப்பெரும் தங்க ஃபேக்டரி என்று சொல்லப்படக்கூடிய மிகப்பெரிய தங்க இருப்பை (Reserves) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடலுக்கடியில் இவ்வளவு பெரிய தங்க இருப்புகள் எப்படி உருவானது என்பது பற்றியும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். அது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தங்கம் பூமியில் கிடைக்க கூடிய அரிய வகை தனிமங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு நாட்டின் பண மதிப்பை நிர்ணயிப்பது முதல் இந்தியா போன்ற நாடுகளில் வீட்டில் உள்ள அந்தஸ்தை காட்டுவது என தங்கத்தின் மதிப்பை தனியாக சொல்லி தெரியவேண்டியது இல்லை.

பசிபிக் கடலுக்கடியில் தங்கம்
தங்கத்தை பொறுத்தவரை அதிக அளவில் சுரங்கங்களில் இருந்து தான் தோண்டியெடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய புள்ளி விவரங்களின்படி, இன்னும் 20 முதல் 25 ஆண்டுகளில் பூமியில் தோண்டி எடுக்கக்கூடிய நிலையில் உள்ள தங்கம் தீர்ந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் சுரங்கங்களில் இருந்தும் அதிக அளவில் தோண்டப்படுகிறது.
இதே வேகத்தில் தோண்டினால், 2050-க்குள் புதிய தங்கம் எடுப்பது என்பது மிக அரிதான ஒன்றாக மாறிவிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் புவியியல் ஆராய்ச்சியிலும் பல்வேறு இடங்களில் தங்க இருப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பசிபிக் கடலின் அடியில் தங்க தொழிற்சாலை என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய தங்கம் இருப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கத் தொழிற்சாலைகள்
ஜெர்மனியைச் சேர்ந்த கடல் புவியியல் ஆய்வுக் குழுவினர் நடத்திய இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் படி, தென் பசிபிக் கடலில், குறிப்பாக நியூசிலாந்துக்கு அருகிலுள்ள எரிமலைப் பகுதிகள், மதிப்புமிக்க தங்கப் படிமங்களை உருவாக்கும் இயற்கையான "தங்கத் தொழிற்சாலைகளாக" செயல்படுவதைக் கண்டறிந்துள்ளது.
இந்தத் தங்கம் உருவாகும் செயல்முறை பூமியின் ஆழத்தில் தொடங்குகிறது. கடல் தளத்துக்கு அடியில் டெக்டோனிக் தகடுகள் அசையும்போது, வெப்பமும் அழுத்தமும் உருவாகி பாறைகளை உருக வைக்கின்றன. அப்போதுதான் தங்கம் உருவாவதற்குத் தேவையான திரவங்கள் வெளியேறுகின்றன. ஆராய்ச்சியாளர்கள், கடலுக்கு அடியில் எரிமலைக் குழம்பு வேகமாக குளிர்ந்து உருவான 66 எரிமலைக் கண்ணாடித் துண்டுகளைப் பகுப்பாய்வு செய்தனர்.
கனிமப் படிமங்களாக மாறுகிறது
இந்த மாதிரிகளில், வழக்கமான பாறைகளை விட மிக அதிக அளவு தங்கம் இருப்பது தெரியவந்தது. பாறைகள் உருகும்போது, சல்பருடன் பிணைந்திருக்கும் தங்கம் தனியாகப் பிரிந்து எரிமலைக் குழம்புடன் சேர்ந்து பயணிக்கிறது. இது கடல் தளத்தில் உள்ள வெப்ப நீர் வெளியேறும் வழியாகப் படிந்து, திடமான கனிமப் படிமங்களாக மாறுகிறது. இந்த ஆய்வு, சாதாரணப் பகுதிகள் என்று நாம் நினைக்கும் இடங்களில்கூட கணிசமான தங்கமும் தாமிரமும் இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, மதிப்புமிக்க கனிமங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். எதிர்காலத்தில் கடலில் உள்ள சாத்தியமான கனிம வளங்களைக் கண்டறியவும் இது ஒரு புதிய வழியைத் திறக்கும் என்று சொல்லப்படுகிறது. பசிபிக் கடலுக்கு அடியில் மிகப்பெரும் தங்க ஃபேக்டரி என்று சொல்லப்படக் கூடிய மிகப்பெரிய தங்க இருப்பை (Reserves) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருப்பது அறிவியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications