195 கிமீ வேகத்தில் பேய் காற்று! அமெரிக்காவை புரட்டி போட்ட மில்டன் சூறாவளி.. 20 லட்சம் பேர் பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் என்பது அடிக்கடி சூறாவளி தாக்கும் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இதற்கிடையே மில்டன் சூறாவளி நேற்று புளோரிடாவில் கரையைக் கடந்த நிலையில், இதனால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், சுமார் 20 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவில் பலவித கிளைமேட்கள் இருக்கும். சில இடங்களில் பணி, சில இடங்களில் அதீத வெப்பம் எனப் பல வகை வானிலை நிலவும்.

அதன்படி அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான புளோரிடா அடிக்கடி சூறாவளி தாக்கும் மாகாணங்களில் ஒன்றாக இருக்கிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் மழை சீசனின் ஏகப்பட்ட சூறாவளிகள் தாக்கும்.
மில்டன் சூறாவளி: கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு உருவான மில்டன் சூறாவளி அம்மாகாண மக்களை அச்சுறுத்தியது. கடந்த பல ஆண்டுகளில் உருவானதிலேயே இது தான் மிகவும் வலிமையான சூறாவளி எனச் சொல்லப்பட்டது. இதற்கிடையே மில்டன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்றிரவு கரையைக் கடந்தது.
நேற்று காலை அதிக ஆபத்தான 5ம் வகை சூறாவளியாக இருந்த மில்டன், புளோரிடாவில் உள்ள சியாஸ்டா கீயின் என்ற பகுதிக்கு அருகே கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் சில மணி நேரத்திற்கு முன்பு அது மூன்றாம் நிலை சூறாவளியாகச் சற்று வலுவிழந்துள்ளது.. இந்த புயல் காரணமாக செயின்ட் லூசி கவுண்டி என்ற பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்னும் கூட பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு சீரடையாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
195 கிமீ வேகத்தில் காற்று: இருந்த போதிலும் புளோரிடாவை நெருங்கும் போது அளவு காற்றின் வேகம் அதிகரித்தது. சுமார் 195 கிமீ வேகத்தில் காற்று வீசி இருக்கிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். மேலும், சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இருளில் மூழ்கின.
புயல் கரையைக் கடந்த போது கனமழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல ஏரிகள் நிரம்பி வழிந்தன. குறிப்பாகப் பல இடங்களில் ஆபத்தான அளவுக்கு நீர் அளவு அதிகரித்தது. இதனால் மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீராக இன்னும் பல மணி நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து சூறாவளி: கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் ஹெலேன் சூறாவளியால் புளோரிடா பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது மீண்டும் மில்டன் புயல் புளோரிடாவை புரட்டிப் போட்டு இருக்கிறது. அடுத்தடுத்து தாக்கிய இந்த புயல்களால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் தேசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. புயல் முழுமையாக ஓய்ந்த பிறகே எந்தளவுக்குச் சேதம் என்பது தெரிய வரும்.
இருப்பினும், இந்த நூற்றாண்டின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. புளோரிடாவைக் கடந்தவுடன் அது மேலும் வலுவிழந்தது.
அரசியல் செய்யும் டிரம்ப்: அதேநேரம் இந்த புயல் அரசியல் அரங்கிலும் எதிரொலித்துள்ளது. புளோரிடா மாகாணம் என்பது பொதுவாகக் குடியரசு கட்சியினர் அதிகம் இருக்கும் மாகாணம். இந்த சூறாவளியை வைத்து அரசியல் செய்துள்ள டிரம்ப், அங்குள்ள மக்கள் & குடியரசு கட்சி ஆதரவாளர்களுக்குச் செல்ல வேண்டிய உதவிகள் புலம்பெயர்ந்தோருக்குச் செல்வதாக விமர்சித்துள்ளார்.
இருப்பினும், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள பைடன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் செல்வதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் புயலால் கஷ்டப்படும் போது அதை வைத்து அரசியல் செய்வது சரியான போக்கு இல்லை என்று டிரம்பை அமெரிக்கத் துணை அதிபரும் ஜனநாயக கட்சியினர் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸும் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications