அமெரிக்காவை மீண்டும் அலற விடும் கொரோனா.. ஒரே நாளில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்காதான். அமெரிக்காவில் 37,896,582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,40,093 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்,
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை அமெரிக்காவை போட்டு பாடாய்படுத்தியது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

மீண்டும் அதிகரிப்பு
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா படிப்படியாக குறைந்தது. பின்பு கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியபோது அமெரிக்காவில் கொரோனா பெருமளவு குறைந்து விட்டது. ஆனால் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் அமெரிக்காவில் மீண்டும் அதிக பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாகியுள்ளது.

இதுவே முதல்முறை
இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கிய பிறகு அமெரிக்காவில் இந்த அளவில் இறப்புகள் பதிவது இதுவே முதல் முறையாகும்.

சராசரியாக 700 இறப்புகள்
கடைசியாக மார்ச் மாதத்தில் தினமும் 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகளை அமெரிக்கா பதிவு செய்தது.இது ஒரு மணி நேரத்திற்கு 42 இறப்புகளுக்கு சமம் என்று ராய்ட்டர்ஸ் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன . சராசரியாக ஒரு நாளைக்கு 769 இறப்புகள் என்று ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ராய்ட்டர்ஸ் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நோயாளிகள் அதிகரிப்பு
கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா மருத்துவமனைகளில் 70% நோயாளிகள் அதிகரித்ததால், அமெரிக்க மருத்துவமனைகள் புதிய நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கடந்த பன்னிரண்டு நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 1,00,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் அமெரிக்காவில் பதிவாகி வருவதாக ராய்ட்டர்ஸ் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இதிலும் தெற்கு அமெரிக்க பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், புளோரிடா மாகாணம் மட்டும் கடந்த வாரம் கிட்டத்தட்ட 26,000 புதிய பாதிப்புகளை பதிவு செய்தது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளின்படி தெரியவருகிறது.

குழந்தைகளுக்கு பாதிப்பு
டெல்டா மாறுபாடு குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளபடிகொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 1,834 ஆக உயர்ந்துள்ளது. புதிய கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் அமெரிக்க அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தத் தொடங்கியுள்ளனர், கடந்த இரண்டு வாரங்களில் ஏற்கனவே திட்டமிட்டபட்ட தடுப்பூசி டோஸ் செலுத்தும் அளவின் ஏழு நாள் சராசரியானது 14% அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பைடன் அரசு
மீண்டும் கொரோனா பாதிப்பு வருவதால் அமெரிக்கா அரசு விழித்துக் கொண்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது என்பதை பொதுமக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் அரசு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications