நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: கடந்த சில காலமாகவே நிலவு குறித்த ஆய்வுகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் செல்லவுள்ளனர். இதற்கான முதல்படியாக நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. சர்வதேச அளவில் கவனிக்கக் கூடிய மிக முக்கியமான விண்வெளி ஆய்வு திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
நமது பூமிக்கு இப்போது ஒரே துணைக்கோளாக நிலா தான் இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிப் போட்டுக் கொண்டு நிலா குறித்து ஆய்வுகளைச் செய்தன. இதற்காகத் தொடர்ச்சியாகப் பல சாட்டிலைட்களையும் அனுப்பின. ஆனால், அதன் பிறகு இரு நாடுகளுமே நிலவு குறித்த ஆய்வுகளை இரு நாடுகளுமே விட்டுவிட்டன.

மீண்டும் நிலவு குறித்த ஆய்வு
இந்தச் சூழலில் தான் சமீப காலமாக மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீண்டும் நிலவுக்கு சாட்டிலைட்களை அனுப்பி ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன. இந்தச் சூழலில் தான் அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை எடுத்தது. இதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன.
எப்போது
அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த நிலையில், வியாழக்கிழமை தினம் நாசா மீண்டும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. 32 மாடிக் கட்டிடம் உயரமுள்ள ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் என்ற ராக்கெட், நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்ணில் சீறிப்பாயத் தயாராக உள்ளது. இந்த ராக்கெட் இந்திய நேரப்படி நாளை காலை 3.54 மணிக்கு ஏவப்பட உள்ளது.
விண்வெளி பயணத்தில் சிறு வானிலை நிகழ்வுகளும் முக்கியத்துவம் பெறும் என்பதால் வானிலை மாற்றங்களையும் குழு கூர்ந்து கவனித்து வருகிறது. கடைசி நேரத்தில் எதிர்பாராத வானிலை மாற்றங்கள் ஏற்பட்டால் அதற்கேற்ப அட்ஜெஸ்ட் செய்ய ஏதுவாக 2 மணி நேர விண்டோ தரப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 3.54 மணிக்கு ராக்கெட்டை ஏவுவதே திட்டம். ஒருவேளை வானிலை சிக்கல் ஏற்பட்டால் நாளை காலை 5.54 மணிக்குள் எப்போது வேண்டும் என்றாலும் ராக்கெட் ஏவப்படும்.
திட்டம் என்ன
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்ட்டிமிஸ் II குழுவின் இந்த விண்வெளிப் பயணம் தொடங்க உள்ளது. நாசா இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் இவர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும். பூமியைச் சுற்றி ஒரு நாள் பயணித்த பிறகு, ஓரியன் விண்கலம் அவர்களைச் சந்திரனுக்கு அழைத்துச் செல்லும். அங்குத் தேவையான ஆய்வுகளைச் செய்த பிறகு அந்த டீம் மீண்டும் பூமிக்குத் திரும்பும். சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கும்.
நிலவில் மீண்டும் மனிதர்கள்
அதேநேரம் இதில் நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லவே ஆர்டெமிஸ் மிஷன் நடந்து வந்தாலும் இந்த குறிப்பிட்ட ஆர்டெமிஸ் IIல் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இவர்கள் நிலவுக்கு மேல் சில ஆயிரம் கிமீ தொலைவில் அதைச் சுற்றி மட்டுமே வருவார்கள். ஆர்டெமிஸ் 4 மிஷனில் தான் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவார்கள். இது 2028ல் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications