ஐநாவில் பேசியதை திரித்து வெளியிடுகிறார்கள்.. இந்திய அரசுக்கு..கைலாசாவின் பெண் தூதர் சொல்றதை பாருங்க!
வாஷிங்டன்: ஐநா அவையில் நான் வெளியிட்ட கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு சிலர் திரித்து வெளியிடுகின்றனர் என்று விஜயபிரிய நித்தியானந்தா விளக்கமளித்துள்ளார். மேலும் நித்யானந்தா மற்றும் கைலாசாவிற்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகிறோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இது தொடர்பாக அவர் மீதும் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி தப்பி ஓடினார்.

கைலாசாவில் நித்யானந்தா
தற்போது, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ள நித்யானந்தா அந்த நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. அதுபோக கைலாசா நாட்டின் பெருமைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நித்தியானந்தா ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம்
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கைலாசாவின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அதாவது, கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான தூதர் என அழைக்கப்படும் விஜயபிரியா நித்யானந்தா மற்றும் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் சிலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதும் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டு இருந்தன.

நித்யானந்தாவை கொடுமைப்படுத்துவதாக
அதுபோக இந்தக் கூட்டத்தில் பேசிய விஜயபிரியா நித்யானந்தா, கைலாசா நாட்டின் அருமை பெருமைகளை குறிப்பிட்டதோடு தங்களின் தலைவர் நித்யானந்தாவை கொடுமைப்படுத்துவதாகவும் கூறியிருந்தது. ஐநா கூட்டத்தில் கைலாசா பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி என்ற விவாதம் அதிகரித்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த ஐநா அதிகாரிகள், ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கூட்டத்தில்தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் என யாராக இருந்தாலும் பங்கேற்கலாம்.

விஜயபிரிய நித்தியானந்தா விளக்கம்
அந்த அடிப்படையிலேயே கைலாசா பிரதிநிதிகள் பங்கேற்றதாகவும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்பிற்கு பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நித்தியானந்தா பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டது. எனவே நித்தியானந்தா தரப்பினரின் கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் அவையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது" என்று தெரிவித்து இருந்தது. கடந்த சில தினங்களாகவே நித்தியானந்தாவின் கைலாசா பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், விஜயபிரிய நித்தியானந்தா தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவை உயர்வாக கருதுகிறது
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவை கைலாசா உயர்வாக கருதுகிறது. இந்தியாவை தனது குரு பீடமாக கைலாசா நினைக்கிறது. பகவன் நித்தியானந்தா பரமசிவம் பிறந்த இடத்தில் சிலரால் துன்புறுத்தப்பட்டார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஐநா அவையில் நான் வெளியிட்ட கருத்துகள் தவறாக புரிந்து கொண்டு சிலர் திரித்து வெளியிடுகின்றனர். நித்யானந்தா மற்றும் கைலாசாவிற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications