'முழு பூசணிக்காய்' கொரோனா பாதிப்பை மறைக்கும் சீனா..போட்டு உடைத்த WHO..என்ன சொல்லி இருக்கு தெரியுமா?
வாஷிங்டன்: சீனாவில் கொரோனாவின் புதிய வேரியண்ட்கள் எதுவும் இல்லை என்றும் சீனா அளித்த தரவுகள் காட்டுவதாகவும் அதேவேளையில், அந்த நாடு உயிரிழப்புகளை குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் பிஎப் 7 வகை வேரியண்ட் காரணமாக கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வரும் நிலையில், பல புதிய வேரியண்ட்களும் சீனாவில் பரவியிருக்கலாம் என தகவல் வெளியாகி இருந்தது.
கொரோனாவை இந்த உலகத்திற்கு முதன் முதலாக பரப்பிவிட்ட நாடு சீனா. கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலாக கொரோனா பரவியது.
அப்போது ஜிரோ கோவிட் பாலிசி என்ற கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனா பரவலை ஓரளவு கட்டுப்படுத்தி விட்டதாக சீனா, தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்து வருகிறது.

புதிய வேரியண்ட் வைரஸ்
பிற நாடுகளில் எல்லாம் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து விட்ட நிலையில், சீனாவில் ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் வைரஸ் ஆன பிஎப் 7 மற்றும் பிஏ5.2 ஆகிய வைரஸ் ஆதிக்கம் காரணமாக சீனாவில் காட்டுத்தீ போல கொரோனா பரவியது. கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கொந்ததளித்ததால் கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டது. இதனால், சீனாவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு இருந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள்
நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் பாதிப்பு இருந்ததாக செய்திகள் வெளியாகின. அதேபோல், இறந்த உறவினர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் மயானங்களில் காத்திருப்பதாகக் கூட தகவல் வெளியாகி அதிர வைத்தது. சீனாவில் பரவும் கொரோனா எண்ணிக்கை பிற நாடுகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை முடுக்கி விட்டது. சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

தினசரி கொரோனா பாதிப்பு
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்பன போன்ற கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் விதித்தன. தினமும் பல லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்புகளும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளும் சீனாவில் ஏற்பட்டு வருவதாக அதிர வைக்கும் தகவல் வெளியானாலும் சீனா வெறும் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறியது. அதேபோல், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதையும் நிறுத்துவதாக சீனா அறிவித்தது.

மீண்டும் ஆபத்தாக அமையும்
சீனாவின் இந்த வெளிப்படையற்ற தன்மையால் சீனாவின் புதிய வேரியண்ட்கள் பரவி உலகத்திற்கு மீண்டும் ஆபத்தாக அமையும் என்று உலக நாடுகள் கவலை தெரிவித்தன. இதனிடையே, சீனா கொரோனா பரவல் குறித்த உண்மைத்தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கிடுக்கிப்பிடி போட்டது. இதன்படி, சீனாவின் நோய் தடுப்பு மையம் உலக சுகாதார அமைப்பிடம் தங்கள் நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்புகள் பற்றிய தரவுகளை அளித்தது. சீனா அளித்த இந்த தரவுகளை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.

சீனா குறைத்து காட்டுவதாக
அதில், சீனாவில் புதிய கொரோனா வேரியண்ட்கள் பரவல் இல்லை என்றும் அதேவேளையில், உயிரிழப்புகளை சீனா குறைத்து காட்டுவதாகவும் உலக சுகாதார மையம் பகிரங்கமாக குற்றம் சாட்டும் வகையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார மையத்தின் எம்ர்ஜென்சிஸ் இயக்குனர் மைக் ரியான் கூறும் போது, சீனா தற்போது அளித்து இருக்கும் தகவல் மருத்துவமனைகளின் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகள் ஆகியவை குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தீவிரத்தை குறைக்க சீனா முன்வர வேண்டும்
அதேபோல், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசுஸ் கூறும் போது, "சீனாவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரம், உயிரிழப்புகள் குறித்த தரவுகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று ஐநா கோருகிறது. தடுப்பூசிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து கொரோனா பாதிப்பின் தீவிரத்தை குறைக்க சீனா முன்வர வேண்டும்" என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications