எப்படி அடிக்குது பாருங்க யோகம்! சிலிண்டர் வாங்க போனவருக்கு ரூ.79 லட்சம் "ஜாக்பாட்"! அதிர்ஷ்டசாலி
வாஷிங்டன்: வட கரோலினாவில் கடைக்கு கேஸ் சிலிண்டர் வாங்குவதற்காக செல்லும் வழியில் லாட்டரி வாங்கி சுரண்டிய வாலிபருக்கு இந்திய மதிப்பில் 79 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்கும்னு பேச்சு வழக்கில் பழமொழி உண்டு. அதை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஒரு இளைஞருக்கு அதிர்ஷ்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள பியூலாவில்லே நகரத்தை சேர்ந்தவர் வில்லியம் ஜோன்ஸ். 32 வயதான இவர் எப்போதாவது லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்டவர்.

பழைய நினைவுகள்
அந்த வகையில், சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள், இறைச்சி மற்றும் கேஸ் சிலிண்டர் வாங்குவதற்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த கடையின் அருகே உள்ள லாட்டரி கடையை பார்த்துள்ளர. லாட்டரி கடையை பார்த்ததும் அவருக்கு பழைய நினைவுகள் வந்தது. அதாவது வில்லியம் ஜோன்ஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்த லாட்டரி கடையில் தான் வாங்கிய லாட்டரியில் 500 டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்தது அவருக்கு நியாபகம் வந்தது.

ஸ்க்ராட்ச் லாட்டரி
பணம் என்றால் எல்லாருக்கு ஆசை வரத்தானே செய்யும். அதுபோல அவருக்கும் சின்ன ஆசை மனதில் தோன்றியது. எனினும் அதேபோன்று அதிர்ஷ்டம் அடிக்குமா? என்ற சந்தேகத்துடனும், ஆசையுடனும் 20 டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 1,550 ரூபாய்) கொடுத்து ஒரு ஸ்க்ராட்ச் லாட்டரி எனப்படும் சுரண்டல் லாட்டரியை வாங்கி இருக்கிறார். முன்பு கிடைத்தது போல ஒரு 500 டாலர்கள் கிடைத்தால் கூட போதும் என்ற எண்ணத்தில் தான் அவரது நினைவில் ஓடிக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் லட்சாதிபதி
மொத்தம் இந்திய மதிப்பில் 79 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொண்ட அந்த லாட்டரியில் தனக்கு எங்கே கிடைக்கப்போகிறது என்று, எந்த நம்பிக்கையும் இல்லாமல் வில்லியம் ஜோன்ஸ், தான் வாங்கிய லாட்டரியை சுரண்டி பார்த்தார். அப்போதுதான், அவருக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறந்துள்ளது. ஆம் சிறிது நேரத்தில் அவர் 79 லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரரானார். தனக்கு லாட்டரியில் 79 லட்சம் ரூபாய் விழுந்துள்ளதை பார்த்து அவருக்கு தலை சுற்றியது. மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் லட்சாதிபதியாகிவிட்டாரே என அங்குள்ளவர்களும் அவரைப்பற்றி பேசாத குறைதான்.

திருமணம் குறித்து சிந்திப்பேன்
லாட்டரி வென்ற வில்லியம் ஜோன்ஸ் இது குறித்து கூறுகையில், ''இந்த பணத்தை எப்படி பயன்படுத்துவது என ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். எனது திருமணம் குறித்து சிந்திப்பேன்'' என்றார். லாட்டரியில் கிடைத்த இந்த பணத்தை பிறருக்கு பயனுள்ள வகையிலும் வில்லியம் ஜோன்ஸ் செலவு செய்தால், அவரைப்போலவே பலரும் கேஸ் சிலிண்டர் வாங்க வருவார்கள் என அங்குள்ளவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டனர்.
முன்னதாக, கடந்த மே மாதமும் இதேபோன்று அவசர தேவையாக பால் வாங்க சென்ற ஒருவர், எதேச்சையாக கண்ணில் தென்பட்ட லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். இதில் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.15 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications