அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இறக்கும் நிலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைக்கும் ஊழியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் 39,665,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6.54 லட்சம் பேர் இறந்துள்ளனர். 30,826,478 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இதில் கலிபோர்னியாவில் 43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு மட்டுமே 65 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1.69 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த சனிக்கிழமை நிலவரப்படி புளோரிடா மாகாணத்தில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.

அங்குள்ள 1 லட்சம் வீடுகளில் 75 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அது போல் நோயாளிகளை கவனித்துக் கொள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது புளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், லவுசியானா ஆகிய பகுதிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் பொதுவாக 90 சதவீதம் மட்டுமே சிலிண்டரில் ஆக்ஸிஜன் நிரப்பப்படும். 30 முதல் 40 சதவீதம் இருக்கும் போது அது மீண்டும் நிரப்புவது வழக்கம்.
தற்போது 10 முதல் 20 சதவீதம் வரையே ஆக்ஸிஜன் உள்ளது. இது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அப்படியே மீண்டும் நிரப்பப்பட்டாலும் 50 சதவீதம் மட்டுமே நிரப்புவர். இது மிகவும் மோசமான நிலையாகும் என்றனர். அது போல் அமெரிக்க மருத்துவமனைகளில் இறப்போரை வைத்திருக்க பிணவறைகளிலும் இடம் இல்லை.

டெல்டா வேரியன்ட் வகை வைரஸ் வேகமாக மக்களிடையே பரவி வருகிறது. இது வேகமாக நோயாளியின் நுரையீரலை தாக்குகிறது. இதனால் அவர்களது நிலைமை மோசமாகிறது. இது போல் நிறைய பேர் பாதிக்கப்படுபவர்கள் தடுப்பூசி போடாதவர்கள். 30, 40, 50 வயதினர் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள தெற்கு கரோலினா, லவுசியானா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் 50 சதவீத மக்களே தடுப்பூசி போட்டுள்ளனர். சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 52.1 சதவீதம் மக்களே முழுமையாக இரு டோஸ்கள் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications