எல்லாமே ஒரே நொடி.. பதறி போன அதிகாரிகள்.. டிரம்ப் இரவு விருந்தில் துப்பாக்கி சூடு... நடந்தது என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், அவரை காலி செய்யக் கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அந்த நொடிகளில் என்ன நடந்தது.. டிரம்பிற்கு நடந்தது என்ன என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கவும் வைத்திருக்கவும் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் அங்குத் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் அங்கு மோசமான சம்பவங்களும் கூட அதிகமாகவே நடந்து வருகிறது. கடந்த 2024ல் கூட டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்திருந்தது.

துப்பாக்கி சூடு
இதற்கிடையே மீண்டும் அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்தில் துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற முக்கியத் தலைவர்கள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நடந்தது என்ன?
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி சுமார் இரவு 8:40 மணியளவில் முதலில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. விருந்தினர்கள் சாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே நுழைந்து அனைவரையும் பாதுகாப்பிற்காகக் கீழே அப்படியே படுக்கச் சொல்லியுள்ளனர். பொதுவாகத் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கும்போது இப்படி தான் செய்யச் சொல்வார்கள்.
இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் சில முக்கியமான வேலைகளை முதலில் செய்தனர். மேடையில் அமர்ந்திருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்தவரை அது விருந்து நடைபெறும் ஹால் பகுதிக்கு வெளியே, பாதுகாப்புச் சோதனை நடைபெறும் 'மேக்னட்டோமீட்டர்' அருகே நிகழ்ந்துள்ளது.
கைது
ஒரு பாதுகாப்பு அதிகாரி மீது தோட்டா பாய்ந்தாலும், அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத ஆடை அவரது உயிரைக் காத்தது. மற்றபடி யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இது துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.. அவர் அந்த ஹோட்டலில் ஒரு விருந்தினராகத் தங்கியிருந்ததால் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி உள்ளே வர முடிந்ததாகத் தெரிகிறது.
டிரம்ப்
சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் இது தொடர்பாக விளக்கியுள்ளார். அதில் அவர், "வாஷிங்டனில் இன்று ஒரு விசித்திரமான மாலைப் பொழுது. சீக்ரெட் சர்வீஸ் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவினர் சிறப்பாகச் செயல்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டார். நான் இந்த நிகழ்ச்சியைத் தொடரலாம் என்றேன். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ.. அதன்படியே நடக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, அனைவரும் ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த விருந்து அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறை இல்லை
டிரம்ப் மீது இதுபோல கொலை முயற்சி தாக்குதல் நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2024 ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு கொலை முயற்சி நடந்தது. அப்போது அவரது காதில் குண்டு உரசிச் சென்றது. அந்தச் சம்பவத்தின் வடு மறைவதற்குள், தற்போது தாக்குதல் முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தச் சம்பவம் நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில்தான் 1981-ல் அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications