"இது முதல்முறை இல்லை.." டிரம்பிற்கு முன் அமெரிக்காவில் எந்தெந்த தலைவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளன!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள போதிலும், அமெரிக்காவில் இதுபோல அதிபர் அல்லது அதிபர் வேட்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே பல முறை இதுபோன்ற தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அவர் நூலிழையில் உயிர் தப்பிவிட்டார். அதேநேரம் அமெரிக்காவில் இதற்கு முன்பு அதிபர்கள், துணை அதிபர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல முறை உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் அமெரிக்காவில் அதிபர் அல்லது அதிபர் வேட்பாளரைக் கொல்லும் முயற்சியில் இதுபோல தாக்குதல் நடப்பது இது முதல்முறை இல்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
1981 ரொனால்ட் ரீகன்: அப்போது அதிபராக இருந்த ரீகன் வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கிருந்து கிளம்பும் போது அவர் மீது ஜான் ஹிங்க்லி ஜூனியர் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ரீகன் 12 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவரது செல்வாக்கு அதிகரித்தது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஜான் ஹிங்க்லி ஜூனியருக்கு கடந்த 2022இல் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜெரால்ட் ஃபோர்டு -1975: கடந்த 1975 செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் அவரை பெண்கள் அமைப்பினர் சிலர் கொல்ல முயன்றனர். வெறும் 17 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை கொலை முயற்சி நடந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அவர் இரண்டு சம்பவங்களில் இருந்தும் எந்தவொரு காயமும் இல்லாமல் உயிர் தப்பினார்.
ஜார்ஜ் வாலஸ் -1972: ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வாலஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேரிலாந்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், அதில் அவர் படுகாயமடைந்தார். இதனால் அவர் அதிபர் ரேஸில் இருந்தும் விலக வேண்டி இருந்தது. பிரிவினைவாத சித்தாந்தம் கொண்ட நபரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராபர்ட் எஃப்.கென்னடி - 1968: ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகக் களமிறங்கிய ஜான் எஃப். கென்னடியின் சகோதரர் ராபர்ட் எஃப். கென்னடி கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். கறுப்பினத்தவர்கள் உரிமைகளுக்காகப் போராடிய தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொல்லப்பட்ட இரண்டே மாதங்களில் இந்த படுகொலை நடந்தது. இது அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜான் எஃப். கென்னடி -1963: அமெரிக்கா வரலாற்றில் நடந்த மிக மோசமான படுகொலை என்றால் அது ஜான் எஃப். கென்னடி படுகொலை சம்பவம் தான். மனைவி ஜாக்கியுடன் வாகன பேரணியில் சென்ற அதிபர் கென்னடி, டெக்சாஸின் டல்லாஸில் லீ ஹார்வி ஓஸ்வால்டால் படுகொலை செய்யப்பட்டார். சோவியத் யூனியனில் வசித்த முன்னாள் கடற்படை வீரர் லீ ஹார்வி ஓஸ்வால்ட் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கு விசாரணை முடிக்கப்பட்டது. அமெரிக்க அரசியலில் வன்முறை காலகட்டத்தைத் தொடங்கிய படுகொலை இது என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.
பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் - 1933: அதிபர் தேர்தலில் வென்ற ரூஸ்வெல்ட் மீது புளோரிடாவின் மியாமியில் பகுதியில் படுகொலை சம்பவம் நடந்தது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் நல்வாய்ப்பாக அவர் காயமடையவில்லை. இருப்பினும், சிகாகோ மேயர் அன்டன் செர்மாக் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தியோடர் ரூஸ்வெல்ட் - 1912: டிரம்பைப் போலவே, டெடி ரூஸ்வெல்ட் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது மீது விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் துப்பாக்கிக் குண்டு அவரது மார்பில் பாய்ந்துள்ளது. இதில் அவர் உயிர் பிழைத்த போதிலும் தனது வாழ்நாள் முழுவதும் அவரது மார்பில் தோட்டா இருந்தது. மேல் பாக்கெட்டில் அவர் வைத்திருந்த 50 பக்க பேப்பர் மற்றும் ஸ்டீல் கண் கண்ணாடி தான் அவரது உயிரைக் காப்பாற்றி உள்ளது.
வில்லியம் மெக்கின்லி -1901: அப்போது அதிபராக இருந்த மெக்கின்லி நியூயார்க்கில் உள்ள பஃபேலோ பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்க அதிபர் படுகொலை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஆபிரகாம் லிங்கன் -1865: இந்த படுகொலை அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது. வரலாற்றில் முதல்முறையாக அதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். வாஷிங்டனில் உள்ள ஃபோர்டு தியேட்டரில் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜான் வில்க்ஸ் பூத் என்பவர் லிங்கனை படுகொலை செய்தார். இந்த ஜான் வில்க்ஸ் துணை அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் உள்துறை செயலாளர் வில்லியம் செவார்ட் ஆகியோரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், நல்வாய்ப்பாக அவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications