அமெரிக்காவில் வால்மார்ட் வணிக வளாகத்தை.. விமானம் மூலம் தகர்க்க முயற்சி? விமானி மிரட்டல்! பரபர வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானம் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாள் என்றால் அது இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற 2001 செப்.11ஆம் தேதியைச் சொல்லலாம். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் தான், அமெரிக்கா விமானம் தொடர்பாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு வந்தது. மேலும், பாதுகாப்பையும் அதிகப்படுத்தியது.

அமெரிக்கா
இந்தச் சூழலில் அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், குட்டி விமானம் ஒன்றைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடகிழக்கு மிசிசிப்பி நகரமான டுபெலோவில் உள்ள வெஸ்ட் மெயின் என்ற பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விமானத்தைக் கடத்தியது மட்டுமின்றி வால்மார்ட் அங்காடியில் மோதிவிடுவேன் என்றும் போலீசாரை மிரட்டியுள்ளார்.

கைது
கொஞ்ச நேரம் அப்படியே வானில் தாறுமாறாக விமானத்தை இயங்கிய அந்த நபர், இறுதியில் விமானத்தைத் தரையிறக்கினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அந்த நபரைத் தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும், அந்த நபரது பெயர் உள்ளிட்ட இதர தகவல்கள் எதையும் போலீசார் பகிர்ந்து கொள்ளவில்லை.

மிரட்டல்
டுபெலோ விமான நிலையத்தில் இருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 90 என்ற சிறிய விமானத்தை அந்த பைலட் திருடியதாகக் கூறப்படுகிறது. அது இரண்டு என்ஜின்கள் உடன் இருக்கும் ஒன்பது இருக்கைகள் கொண்ட விமானம் ஆகும். திருடப்பட்ட விமானத்தைக் கொண்டு மோதிவிடுவேன் என அந்த நபர் மிரட்டிய நிலையில், குறிப்பிட்ட இடத்தை தவிர்க்குமாறு போலீசார் அப்பகுதி மக்களைக் கேட்டுக் கொண்டனர்.

தயார் நிலையில்
அந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், வால்மார்ட் அங்காடியில் இருந்த வாடிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டனர். திருடப்பட்ட அந்த விமானம் சென்ற இடங்களின் மேப்பும் கூட வெளியிடப்பட்டு உள்ளது. விமானத்தைத் திருடிய அந்த நபர் இஷ்டத்திற்கு விமானத்தை இயங்கி உள்ளார். தாறுமாறாக விமானத்தை இயக்கிய அந்த நபர், கடைசியில் ஒரு இடத்தில் மோதி தரையிறக்கி உள்ளார்.

விசாரணை
அவரது செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்த அமெரிக்க போலீசார் அவர் தரையிறங்கியதும் உடனடியாக அவரை கைது செய்தனர். எதாவது பயங்கர திட்டத்துடன் அவர் விமானத்தைக் கடத்தினாரா, அவருக்கு எதாவது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விமானத்தைக் கடத்தியவர் 29 வயது இளைஞர் என்பது மட்டும் முதற்கட்டமாகத் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications