‛‛கோலாகலம்’’.. அமெரிக்காவில் தமிழ் குடும்பங்கள் கூடி கொண்டாடிய தீபாவளி.. பாரம்பரிய உடையில் அசத்தல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ் குடும்பத்தினர் ஒன்றிணைந்து இசை நிகழ்ச்சியுடன் பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் உணவுகள், இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவை போல் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இந்தியர்கள் அனைவரும் ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
புத்தாடை அணிந்து பொதுமக்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்காவை பொறுத்தமட்டில் சுமார் 4 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்களாக உள்ள இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கொண்டாட தவறுவது இல்லை. குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா உள்பட பல இடங்களில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நியூயார்க்கில் உள்ள ஹட்சன் நதியில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடப்படும். வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டு வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இது இந்த ஆண்டும் நடந்தது.

வெள்ளை மாளிகை கொண்டாட்டம்
மேலும் அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்பட்டது. அதிபர் ஜோபைடன், மனைவி ஜில்பைடன் தீபாவளி கொண்டாடி இந்தியர்களுக்கு விருந்து வழங்கினர். அதேபால் துணை அதிபர் கமலா ஹாரீசும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தீபாவளி கொண்டாடினர். மேலும் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15ம் தேதி முதல் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்றது.

தமிழ் குடும்பத்தினர் கொண்டாட்டம்
இவ்வாறு தொடர்ச்சியாக அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் மான்டேகா கலிபோர்னியாவில் வசித்து வரும் தமிழர்கள் சார்பில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. 150க்கும் அதிகமான தமிழர்கள் நண்பர்களாக ஒன்றுக்கூடி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இனிப்புகள் பகிர்ந்து கொண்டாட்டம்
விழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. வயலின், பியானோ வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் நடனமாடினர். அதோடு வீட்டில் அனைவரும் விதவிதமாக உணவுகள், இனிப்புகள் தயாரித்து கொண்டு வந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஒற்றுமையை உணர்த்தும் வகையில் தீபாவளியை கொண்டாடினர். இந்த கொண்டாட்டம் 6 மணிநேரம் வரை சிறப்பாக நடந்தது.

தமிழ் பாரம்பரிய உடை
இந்த விழாவில் அனைவருரம் பாரம்பரிய உடைகள் அணிந்து பங்கேற்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்க தமிழ் பாரம்பரியம், கலாசாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அமெரிக்காவில் வசித்தாலும் கூட தமிழ், இந்திய பாரம்பரியத்தை மறக்காமல் பின்பற்றும் வகையில் இந்த தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.












Click it and Unblock the Notifications