''கொரோனா தொடக்கத்தில்.. இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம்''.. அமெரிக்கா நெகிழ்ச்சி!
வாஷிங்டன்: கொரோனா தொடக்க காலத்தில் இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு இந்திய அமைச்சர் ஒருவர் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
முதல் நாளில் அமெரிக்காவில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

டோனி பிளிங்கனுடன் சந்திப்பு
அப்போது ஹூவர் நிறுவனத்தின் கருத்தரங்கில் பங்கேற்ற ஜெய்சங்கர், இந்துத்வா குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் 'மத்திய அரசை சர்வதேச அளவில் வேறு வழியில் தவறாக சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அரசின் உண்மையான ஆட்சி முறை வேறு மாதிரியானது' என்று தெரிவித்தார். இந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் டோனி பிளிங்க்கனை சந்தித்து பேசினார்.

அமெரிக்கா மறக்காது
அப்போது இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்து ஒற்றுமையை வெளிப்படுத்திய ஜோ பைடன் நிர்வாகத்துக்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துக் கொண்டார். ''கொரோனா தொடக்க காலத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு செய்த உதவி அளப்பரியது. இதனை ஒருபோதும் அமெரிக்கா மறக்காது' என்று டோனி பிளிங்கன் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு நன்றி
இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், ' "நாங்கள் விவாதிக்க நிறைய பிரச்சினைகள் உள்ளன. பல ஆண்டுகளாக எங்கள் உறவுகள் வலுவடைந்துள்ளன என்று நான் நினைக்கிறேன். இந்த உறவு தொடர்ந்து தொடரும் என்று நம்புகிறேன். பெரும் சிரமமான இந்த தருணத்தில் எங்களுக்கு வலுவான ஆதரவு வழங்கிய அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

எங்கள் நட்பு வலுவானது
தொடர்ந்து பேசிய , அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் டோனி பிளிங்கன், ' பல முக்கியமான சவால்களில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து கூட்டாக செயல்படுகின்றன. கொரோனவை எதிர்கொள்வதில் நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்பு முக்கியமானது. மிகவும் வலுவானது. இந்த நட்பு நிலைத்து நின்று பெரிய பயன்களை அறுவடை செய்யும் என்று நான் நம்புகிறேன்' என டோனி பிளிங்கன் கூறினார்.

சீனா குறித்து பேச்சு
இந்த சந்திப்புக்கு முன்னதாக இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டினை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கிடையில் ராணுவ பாதுகாப்பு உறவுகள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சீனாவின் நிலை உள்ளிட்ட சமகால பாதுகாப்பு சவால்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். லாயிட் ஆஸ்டின் சந்திப்பு குறித்து ஜெய்சங்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications