ஈரானுக்கு எதிராக நினைத்து பார்க்கவே முடியாத உதவி.. இஸ்ரேல் அமெரிக்கா இடையேயான இரும்புத்திரை பின்னணி
வாஷிங்டன்: ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி உள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்க இராணுவம் , இஸ்ரேலிய ராணுவத்துடன் இணைந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு நெருக்கமாக ஒருங்கிணைப்பினை தந்து உதவியது என்று தெரிவித்தார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதுபற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறும் போது, "அமெரிக்க கடற்படை ஏவுகணை அழிப்பு பிரிவினர், இஸ்ரேலிய விமானப்படையினருடன் இணைந்து ஏவுகணை இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். எனக்கு தெரிந்தவரை ஈரான் நடத்திய தாக்குதல் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற வேலையாகவே தோன்றுகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தொழில்முறை யுக்தியும், அமெரிக்க இராணுவத்தின் திறமையான வியூகம் மற்றும் தாக்குதலை எதிர்நோக்கி கூட்டுத் திட்டமிடலும் ஈரான் தாக்குல் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு இஸ்ரேலின் பதிலடி குறித்த அமெரிக்காவின் பார்வை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், "அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இடையே விவாதங்கள் தொடர்கிறது. நாங்கள் இஸ்ரேலியர்களுடன் சில ஆழமான ஆலோசனைகளை நடத்த விரும்புகிறோம்.
இஸ்ரேலைப் பாதுகாக்க, அந்நாட்டுன் சேர்ந்து நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தத் தாக்குதலுக்கு பின்விளைவுகள் என்பது மிகவும் கடுமையான விளைவுகளாக இருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம். அதைச் செய்ய நாங்கள் இஸ்ரேலுடன் உறுதியாக இணைந்து செயல்படுவோம்" என்றார்..
இஸ்ரேல் ஈரான் போருக்கு என்ன காரணம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு உடன்படுவதற்கு போதிய அழுத்தம் கொடுக்கத் தவறியிருப்பது, மத்திய கிழக்கு நாடுகளை பிராந்திய போருக்குள் தள்ளும் என்று ஆய்வாளர்கள் பல மாதங்களாக எச்சரித்து வருகிறார்கள். அவர்கள் எச்சரித்தவாரே இப்போது வளைகுடா நாடுகளை போர் சூழ்ந்துள்ளது.
போர் எப்படி நிற்கும்: இதுபற்றி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டான் என்ற சிந்தனைக்குழுவின் வழக்கறிஞர் ரேட் ஜாரர் கூறுகையில், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது அனைத்து போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், அவரது அண்டை நாடுகள் மீதான தாக்குதல்கள் அனைத்திற்கும் அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி மற்றும் உதவி செய்து வருகிறது. இப்படி அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்கின்ற போது , மத்திய கிழக்கு நாடுகளில் பிராந்திய போர் தவிர்க்க முடியாததாகிறது. இஸ்ரேலுக்கு அதிக ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா கூறாதவரை இந்த போர்கள் நிற்காது. இஸ்ரேலிய குற்றங்களுக்கு நாங்கள் நிதியளிக்க மாட்டோம், உதவ மாட்டோம் என்று கூற வேண்டும். அல் ஜெசிராவுக்கு அளித்த பேட்டியில் ரேட் ஜாரர் கூறினார்.
ஈரான் போர்: காசா மற்றும் லெபனானில் மக்கள் கொல்லப்பட்டதற்கும், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஐஆர்ஜிசி தலைவர்களின் படுகொலைகளுக்கும் பதிலடியாக இந்திய நேரப்படி நேற்று இரவு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதாக ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தள்ளது. முன்னதாக தெற்கு லெபனானுக்குள் தரைவழி ஊடுருவல்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறிய சில மணி நேரங்களில் துப்பாக்கிச் சூடு அங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் இஸ்ரேலியப் படைகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்ததை ஹிஸ்புல்லா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த பல மாதங்களாக இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹெஸ்பொல்லாவுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் இஸ்ரேலிய இராணுவம், சமீபத்தில் அந்நாட்டின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்கள் கடந்த வாரங்களில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுடன், பலரையும் படுகாயப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல்கள் மற்றும் மத்திய வளைகுடாவில் உள்ள பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்காவில் ஜோ டைன் நிர்வாகம், ராஜதந்திரத்துடன், போரை குறைக்க விரும் குறைக்க விரும்புவதாகவும் மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. அதெல்லாம் வாயில் வடைசுடும் போக்காகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அளவில் இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது.
வாஷிங்டன் இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 3.8 பில்லியன் டாலர் இராணுவ உதவியை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் காசா போர் தொடங்கியதில் இருந்து பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, தனது நட்பு நாடுகளுக்கு கூடுதல் உதவியாக 14 பில்லியன் டாலர்களை வழங்கி இருக்கிறது.
ஈரானின் தாக்குதல் பற்றி ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசும் போது, இஸ்ரேலுடன் இணைந்து பதிலடி கொடுப்பது குறித்து விவாதிதது வருகிறோம். இந்த தாக்குதல் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இது தேவையற்ற வேலை. அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழுமையாக, முழுமையாக ஆதரவளிக்கிறது" என்று கூறினார்.
இதனிடையே டாவின் ஆய்வாளரான ஜராரின் கூறுகையில், "இஸ்ரேலுக்கான ஜோ பைடன் நிர்வாகத்தின் "வெற்று காசோலை" கொள்கையே தற்போதைய நிலைக்கு காரணம் ஆகும். பைடன் நிர்வாகம் செயலிழந்துள்ளது. அங்கு சரியான எந்த ஒரு தலைமையும் இல்லை. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் பணத்தை 100 சதவிகிதம் கொடுக்கிறது. எனவே இஸ்ரேலுக்கு நிச்சயம் முழுமையான அழுத்தத்தை அமெரிக்கா கொடுக்க முடியும். அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர் விரும்பும் அனைத்தையும் பெறுகிறார். இன்று நாம் கண்டுபிடிப்பது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்கத் தலைமையின் தோல்வியின் விளைவாக நடந்து கொண்டிருப்பவை. முழுமையாக போர் ஆரம்பித்துள்ளது என்று வேதனை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications