பூமிக்கு ஆபத்து? சுழன்றடிக்கும் பல நூறு சிறுகோள்கள்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் பேரழிவு நிச்சயம்
வாஷிங்டன்: பூமியை இதுபோல பல ஆயிரம் விண்கற்கள் சுற்றி வருகிறது. அதில் பெரிய சைஸ் விண்கற்களைக் காட்டிலும் நடுத்தர சைஸ் கொண்ட விண்கற்களே பூமிக்கு ஆபத்தாக மாறும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சுமார் 60% விண்கற்களின் இருப்பிடமே நமக்குத் தெரியாமல் இருக்கும் சூழலில், இது பெரிய ஆபத்தாக மாறலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்!
பூமியைச் சுற்றிலும் ஏகப்பட்ட விண்கற்கள் சுற்றி வருகிறது. ஏதோ ஓரிரு விண்கற்கள் இல்லை.. பல ஆயிரம் விண்கற்கள் பூமியைச் சுற்றி வருகிறது. இதுபோல சுற்றும் விண்கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்! அதில் பல ஆயிரம் கில்லர் சிறுகோள்களின் துல்லியமான இருப்பிடம் ஆய்வாளர்களுக்குத் தெரியவில்லை என நாசாவின் கோள் பாதுகாப்புத் துறைத் தலைவர் டாக்டர் கெலி ஃபாஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆபத்து
அமெரிக்காவின் பினிக்ஸில் நடைபெற்ற அமெரிக்க அறிவியல் மேம்பாட்டு சங்க மாநாட்டில் பேசிய அவர், "குறைந்தது 140 மீட்டர் அகலமுள்ள சுமார் 15,000 நடுத்தர அளவிலான சிறுகோள்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை" என்றார். இவை பூமியின் புவி வட்டப் பாதையில் நுழைந்து, மக்கள் வசிக்கும் பகுதியில் மோதினால், பெரும் பிராந்திய அழிவு ஏற்படும் என்றும் ஃபாஸ்ட் எச்சரித்தார்.
டாக்டர் ஃபாஸ்ட் மேலும் கூறுகையில், "பல சிறுகோள்கள் குறித்து நமக்கு தெரியாது. நடுத்தர சைஸ் கொண்ட சிறுகோள்கள் தான் ஆபத்தானவை. அவை குறித்துத் தான் நாம் உண்மையில் கவலைப்பட வேண்டும்.
நடுத்தர சைஸ் சிறுகோள்
சினிமாக்களில் வருவது போலப் பெரிய சைஸ் சிறுகோள்கள் பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் அவை துல்லியமாக எங்கு உள்ளது என்பது நமக்குத் தெரியும். அதேபோல சிறிய சைஸ் சிறுகோள் குறித்தும் கவலை தேவையில்லை. அவரை புவி வட்டப் பாதைக்குள் நுழைந்தாலும் எரிந்து தன்னை தானே அழித்துக் கொள்ளும். ஆனால், நடுத்தர சைஸ் சிறுகோள்கள் தான் பிரச்சினை. அவை எங்கு உள்ளன என்பது நமக்குத் தெரியாது. அதுவே சிக்கலுக்குக் காரணம்!
ஒட்டுமொத்தமாக பூமிக்கு ஆபத்தாக இருக்காது. ஆனால், அவை பூமியில் மோதினால் மிக மோசமான சேதாரம் ஏற்படும். இந்த நடுத்தர சைஸ் விண்கலம் அனைத்தும் எங்கே இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. உலகின் மிகச் சிறந்த தொலைநோக்கி மூலம்கூட இதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியாது" என்றார்.
ராக்கெட் இல்லை
ஒருவேளை நடுத்தர அளவு கொண்ட சிறுகோள் திடீரெனப் பூமியை நோக்கி வந்தால்.. அதைத் தாக்கி அழிக்கும் செயற்கைக்கோள் எதுவும் நம்மிடம் இல்லை என்கிறார் நாசாவின் இரட்டை சிறுகோள் திசை மாற்றும் சோதனை திட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நான்சி சாபோட்! அவர் மேலும் கூறுகையில், "ஒய்.ஆர்.4 சைஸ் சிறுகோள் ஏதேனும் பூமியை நோக்கி வந்தால்.. அதை அழிக்கும் வழி இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ராக்கெட்டை நம்மால் உருவாக்க முடியும். ஆனால், அதற்கு யாரும் முதலீடு செய்யவில்லை" என்றார்.
ஏன் ஆபத்து
ஒய்.ஆர்.4 சிறுகோள் என்பது ஒரு கால்பந்து மைதானம் அளவு கொண்ட சிறுகோளாகும். இவை 2024ல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்தது. அருகே வந்த பிறகே ஆய்வாளர்கள் இதைக் கண்டறிந்தனர். இவை 2032 வரை பூமியில் மோத வாய்ப்பு இல்லை என்றாலும் கூட ஆய்வாளர்களிடம் சிக்காமல் பூமிக்கு இவ்வளவு அருகே வந்தது பலருக்கும் அதிர்ச்சி தான்!
தற்போதைய சூழலில் 140 மீட்டருக்கும் அதிகமான சைஸ் கொண்ட சிறுகோள்களில் சுமார் 40 சதவிகிதத்தை மட்டுமே நாசா அடையாளம் கண்டுள்ளது. எனவே, பூமியை நோக்கி சிறுகோள் வந்தால் அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!












Click it and Unblock the Notifications