அதிபர் டிரம்ப் இல்லத்தை சுற்றிய மர்ம விமானங்கள்.. உடனே களமிறக்கப்பட்ட F-16 ஜெட்கள்! என்ன நடந்தது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தங்கும் புளோரிடாவின் மார்-எ-லாகோ ரிசார்ட் மேல் திடீரென அடையாளம் தெரியாத விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் 120 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று மர்ம விமானங்கள் பறந்த நிலையில், உடனடியாக பைட்டர் ஜெட்கள் அங்குக் களமிறக்கப்பட்டன. இதனால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகில் மிகவும் பாதுகாக்கப்பட்ட நபர்களில் ஒருவராக இப்போது அமெரிக்காவின் அதிபராக உள்ள டிரம்ப் இருக்கிறார். அமெரிக்க அதிபர் பதவியில் இருப்பதாலேயே அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே அதிபர் டிரம்ப் எந்தவொரு இடத்திற்குச் சென்றாலும் சீக்ரெட் சர்வீஸ் மூலம் அவருக்குச் சிறப்பு பாதுகாப்பு போடப்படும். பாதுகாப்பு 100% உறுதி செய்யப்பட்ட பிறகே அதிபர் டிரம்ப் வெளியே வரக் கூட அனுமதி அளிக்கப்படும்.
மர்ம விமானங்கள்
மேலும், பாதுகாப்பு காரணங்களால் வெள்ளை மாளிகை மற்றும் அதிபரின் குடியிருப்புகளுக்கு மேல் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பெரும்பாலும் வெள்ளை மாளிகையில் தான் இருப்பார் என்ற போதிலும் சில சமயம் புளோரிடாவில் உள்ள அவரது மார்-எ-லாகோ ரிசார்ட்டிலும் தங்குவார். இதனால் அங்கும் கடுமையாகப் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருக்கும். அதன்படி மார்-எ-லாகோ ரிசார்ட் மேல் எந்தவொரு விமானங்களும் பறக்கக்கூடாது என மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்
இதற்கிடையே திடீரென நேற்றைய தினம் அடுத்தடுத்து மூன்று சிவிலியன் விமானங்கள் தடை செய்யப்பட்ட இந்த பகுதிக்குள் நுழைந்துள்ளன. காலை 11:05, மதியம் 12:10 மற்றும் 12:50 என அடுத்தடுத்து மூன்று விமானங்கள் உள்ளே நுழைந்துள்ளன. அந்த விமானங்கள் ஏன் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்தன என்பது குறித்துத் தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் தவறுதலாகவே அந்த விமானங்கள் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பகுதியில் விமானம் நுழைந்த உடனேயே அமெரிக்க ஏரோஸ்ஸேஸ் டிவன்ஸ் கமெண்ட் உடனடியாக தனது எஃப் 16 போர் விமானங்களை அங்கு அனுப்பியுள்ளன. சிவிலியன் விமானங்கள் அருகே சென்ற இந்த பைட்டர் ஜெட்கள், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து உடனடி வெளியேற அறிவுறுத்தினர்.
பைட்டர் ஜெட்கள்
மேலும், பைட்டர் ஜெட்களில் இருந்து திடீரென ஃப்ளேர்களும் வந்துள்ளன. அதாவது எந்த வழியாக சிவிலியன் விமானங்கள் செல்ல வேண்டும் என்பதைக் காட்ட அதிகளவில் ஒளி மற்றும் புகை வரும் ஃப்ளேர்களை பைட்டர் ஜெட்கள் பயன்படுத்தியுள்ளன. இருப்பினும், இதனால் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறை இல்லை
அதேநேரம் டிரம்பிற்கு சொந்தமான மார்-எ-லாகோ ரிசார்ட்டிற்கு மேல் இதுபோல விமானங்கள் அத்துமீறி நுழைவது இது முதல்முறை இல்லை. கடந்த பிப்ரவரி 15 மற்றும் 17ம் தேதிகளிலும் இதுபோல விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு இங்கு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தெரியாமல் சிவிலியன் விமானங்கள் மேலே பறப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடந்தாலும் கூட இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. மேலும், கூடுதலாகப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications