இஷ்டத்திற்கு நாடு கடத்த முடியாது! டிரம்பிற்கு கடிவாளம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்.. இந்திய மாணவர்களுக்கு நிம்மதி
வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் கடந்த சில காலமாகவே தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால் பல ஆயிரம் மாணவர்கள் நாடு கடத்தப்படும் சூழல் ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில் டிரம்பின் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடும் வகையில் அமெரிக்க நீதிமன்றம் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் அங்குக் குடியேறியவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் அவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை மட்டுமே குறிவைத்து நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால், இப்போது டிரம்ப் அரசு சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களையும் கூட குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாட்டு மாணவர்கள்
இதில் பெரிதும் பாதிக்கப்படுவது வெளிநாட்டு மாணவர்கள் தான். எங்கு தங்கள் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சத்திலேயே அமெரிக்க மாணவர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள், குறிப்பாக இந்தியா மாணவர்களுக்கு நிம்மதி தரும் உத்தரவை அமெரிக்க பெடரல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் பல ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை நாடுகடத்த டிரம்ப் நிர்வாகம் முயன்ற நிலையில், அதை நிறுத்த அமெரிக்க பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கலிபோர்னியாவின் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஜெஃப்ரி வைட் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் அவை விதிகளைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
கடிவாளம் போட்ட நீதிமன்றம்
அமெரிக்க மாவட்ட பெடரல் நீதிபதி தனது 21 பக்க தீர்ப்பில் டிரம்ப் நிர்வாகத்தை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்க பெடரல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சர்வதேச மாணவர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் காட்டமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது டிரம்ப் அரசுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய செக்காக பார்க்கப்படுகிறது.
அத்துமீறும் டிரம்ப் நிர்வாகம்
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள். அவர்களுக்கு மாணவர்களுக்கான எப்1 விசா வழங்கப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் இந்த எஃப்1 விசா வைத்திருப்போருக்கு எதிராகத் தான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்கள் எதாவது சிறு விதிமீறலில் ஈடுபட்டாலும் அவர்களின் விசாவை ரத்து செய்து நாடுகடத்தலில் ஈடுபட்டுள்ளது.
விதிமீறல் மட்டும் இல்லை.. போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது போலீஸ் தவறாகக் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை இல்லை என்றால் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்றே அர்த்தம். ஆனால், அவர்கள் மீதும் கூட டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல இந்தியர்கள் உட்பட 1000+ மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு நிம்மதி தருவதாக இருக்கும்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உடனும் கூட டிரம்ப் நிர்வாகம் மோதல் போக்கைக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் டிரம்ப் அரசு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் பரிமாற்ற திட்டத்தின் சான்றிதழை திடீரென ரத்து செய்திருந்தது. அதாவது சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதற்கான பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தைப் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சர்வதேச மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நேரத்தில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றமும் டிரம்ப் நிர்வாகத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications