ரெசிப்ரோக்கல் வரியை விடுங்க.. சத்தமே இல்லாமல் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு டிரம்ப் வைத்த ஆப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் திடீரென தடாலடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் தான் அவர் உலகின் பல்வேறு நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்திருந்தார். உலகமே அது குறித்துப் பரபரப்பாகப் பேசி வரும் நிலையில், சத்தமில்லாமல் அவர் மற்றொரு நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம் அங்குள்ள வெளிநாட்டினருக்குப் பெரிய சிக்கலே ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெசிப்ரோக்கல் வரி குறித்து அறிவித்தார். அதாவது உலகின் பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை அறிவித்தார். இந்தியா, சீனா, கனடா எனப் பாரபட்சமே இல்லாமல் அனைத்து நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை அறிவித்தார். இது சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதாக இருக்கிறது.

டிரம்ப் சத்தமில்லாமல் போட்ட உத்தரவு
உலகமே டிரம்ப் வரியால் பரபரத்து போய் இருக்கும் சூழலில் சத்தமே இல்லாமல் டிரம்ப் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது அமெரிக்க அரசின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (CIS) அலுவலகத்தை மூட சத்தமே இல்லாமல் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் குடியேறுவோருக்கு விசா தொடர்பான உதவிகளை இந்த சிஐஎஸ் அலுவலகம் தான் கொடுத்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் இதனால் பயன் பெற்று வந்தனர். இதைத் தான் சத்தமில்லாமல் மூட அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த முடிவு கிரீன் கார்டு வைத்திருப்போர், F-1 விசா வைத்திருக்கும் சர்வதேச மாணவர்கள் மற்றும் H-1B விசா வைத்திருப்போரை பாதிக்கும். ஹெச் 1பி விசாவை இந்தியர்களே அதிகம் வைத்திருக்கும் சூழலில், டிரம்பின் இந்த முடிவு அவர்கள் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
விசா நடைமுறை
பொதுவாக விசா என்பது குறிப்பிட்டக் காலகட்டத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் ஒன்றாக இருக்கும். விசா காலத்தைத் தாண்டி ஒரு நாட்டில் இருப்பது சட்டவிரோதம். எனவே, விசா காலக்கெடு முடியும் சமயத்தில் அதைப் புதுப்பிக்க விண்ணப்பிப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் பல காரணங்களால் விசா புதுப்பித்தல் விண்ணப்பங்கள் காலதாமதம் ஆகும். அதுபோல காலதாமதம் ஆகும்போது அங்குள்ளவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்து கேள்விக்குறியாகும். அதுபோன்ற சூழலில் சிஐஎஸ் அலுவலகத்தையே அங்குள்ளவர்கள் அணுகுவார்கள் என்கிறார் வழக்கறிஞர் ராஜீவ் எஸ். கன்னா.
அவர் மேலும் கூறுகையில், "விசாவில் சிக்கல் வரும்போது அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர் செல்லும் முதல் இடமாக இந்த சிஐஎஸ் அலுவலகம் இருக்கும். அமெரிக்காவில் ஒருவர் இருப்பதே கேள்விக்குறியாகும்போது அவர்களுக்கு சிஐஎஸ் அலுவலகம் தான் உதவி வந்தது. விசா தொடர்பான ஒர்க்ஷாப்களையும் நடத்தி, தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கி வந்தது" என்கிறார்.
சிக்கல்
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் இந்த அலுவலகம் சுமார் 30,000 விண்ணப்பங்களை பிராசஸ் செய்துள்ளது. விசா பிழைகளைச் சரி செய்வது, தாமதம் குறித்து விளக்குவது என அனைத்தையும் செய்வார்கள். இப்போது இந்த அலுவலகம் மூடப்பட்டது அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு பெரும் சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது.
ஏன் முக்கியம்
சிஐஎஸ் அலுவலகம் மட்டுமின்றி இரு குடியேற்றக் கட்டுப்பாட்டு அமைப்புகளையும் மூட டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் விசாவில் ஏதேனும் சிக்கல் வந்தாலும் கூட அது குறித்து புகார் கூட அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சிஐஎஸ் அலுவலகம் விசா தாமதம் குறித்த புகார்களில் சுமார் 15% வரை கையாண்ட நிலையில், இப்போது அந்த அலுவலகமே மூடப்பட்டுள்ளது தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும். மேலும், ஹெச் 1 பி விசாவை அதிகம் இந்தியர்களே வைத்துள்ள நிலையில், டிரம்ப்பின் உத்தரவு அவர்களையும் நேரடியாகப் பாதிக்கிறது.












Click it and Unblock the Notifications