வரி விஷயத்தில் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய டிரம்ப்! எப்படி சமாளிக்கப்போகிறார்? அடுத்த நகர்வு என்ன
வாஷிங்டன்: பரஸ்பர வரி விஷயத்தில் அமெரிக்காவின் நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது உள்நாட்டிலேயே அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றமும், பரஸ்பர வரி விதித்த டிரம்ப் அதிகார வரம்பை மீறியிருக்கிறார் என்று கூறியிருக்கிறது. நீதிமன்றமே இப்படி சொல்லும் என எதிர்பார்க்காத டிரம்ப் உடைந்து போயிருக்கிறார். அவருடைய அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என கேள்வி எழுந்திருக்கிறது.
ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நிலையில், அதிகார வரம்பை மீறி டிரம்ப் பரஸ்பர வரியை விதித்திருக்கிறார் என்று கூறியிருக்கிறது.

அதாவது, அமெரிக்காவின் அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில்தான் இந்த வரியை டிரம்ப் விதித்திருந்தார். ஆனால் இந்த சட்டத்தில் பரஸ்பர வரி விதிக்க அனுமதியில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. அமெரிக்காவிற்கு வெளியே இருந்து வரும் அச்சுறுத்தும் சூழ்நிலைகளை சமாளிக்க, அமெரிக்க அதிபருக்கு சில கூடுதல் அதிகாரங்களை இந்த சட்டம் வழங்குகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை அல்லது பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இந்த சட்டத்தை அதிபர்கள் கையில் எடுக்கலாம்.
இந்த சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட நாடுகள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள், வணிகத் தடைகள் அல்லது சொத்து முடக்கங்களை அமல்படுத்தலாம். அமெரிக்க அதிகார வரம்புக்குட்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் சொத்துக்களையும், நிதி பரிவர்த்தனைகளையும் முடக்கலாம். அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள், கடன் பரிமாற்றங்கள் அல்லது வேறு நிதி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தவும் தடை செய்யவும் இந்த சட்டம் அதிகாரம் கொடுக்கிறது.
ஆனால் பரஸ்பர வரி (reciprocal tariffs) விஷயத்தில் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. எனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிகார வரம்பை மீறி வரியை போடப்பட்டிருக்கிறது என டிரம்ப்பை நீதிமன்றம் சாடியுள்ளது.
தீர்ப்பு தனக்கு சாதகமாக வராத நிலையில் அப்செட் ஆகியுள்ள டிரம்ப் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி மேல்முறையீடு செய்யும்போது இரண்டு விஷயங்கள் நடக்கும். முதல் விஷயம் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் வித்த உத்தரவை அப்படியே ஏற்றுக்கொள்ளும். அதாவது டிரம்ப் செய்தது தவறு என சொல்லும்.
இரண்டாவதாக, டிரம்ப் செய்தது சரி என்று கூறி, ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும். இப்படி செய்வதன் மூலம், அமெரிக்காவின் அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை டிரம்ப் தீவிரமாக அமல்படுத்த வழி வகுக்கப்படும். வரி விஷத்தில் இன்னும் தீவிரமாக டிரம்ப் கவனம் செலுத்துவார் என லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பொருளாதார நிபுணரான டாக்டர் லிண்டா யூக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு போகும் எனில், அதில் டிரம்ப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வர வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் உள்ள 9 நீதிபதிகளில் 6 பேர் டிரம்ப் கட்சியின் அதிபர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த 6 நீதிபதிகளில் 3 நீதிபதிகளை டிரம்ப் தனது முதல் பதவி காலத்தில் தேர்ந்தெடுத்திருந்தார். இருப்பினும் அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படாத கொள்கைகளை அந்நாட்டு அதிபர்கள் அமல்படுத்த முயலும்போது நீதிமன்றம் தலையீடு செய்து தவிர்த்திருக்கிறது. டிரம்புக்கும் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
பொறுத்திருந்து பார்ப்போம், டிரம்ப் மேல் முறையீட்டுக்கு செல்கிறாரா? இல்லையா? என்று.












Click it and Unblock the Notifications