மனித மலத்தை ரூ.1.4 கோடி கொடுத்து வாங்கும் பிரபல நிறுவனம்.. பலரது உயிரை கூட காப்பாற்றுமாம்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வுக்காக மனித மலத்தை வாங்கும் நிலையில், அதற்கு ரூ.1.40 கோடியைத் தருகிறது என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் நீங்கள் பல வினோதமான செய்திகளைப் பார்த்து இருக்கலாம். இப்படி கூட நடக்குமா என நீங்கள் யோசிக்காத மேட்டர்கள் கூட அங்கு அசால்டாக நடக்கும்.

அப்படியொரு வினோதமான சம்பவம் தான் அமெரிக்காவில் இப்போது நடக்கிறது. மனித மலத்தை வைத்து ஆய்வு செய்யும் நிறுவனம் இதற்காக 1.40 கோடி ரூபாயையும் கொடுக்கிறார்களாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க நிறுவனம்: நீங்கள் இளமையான நபராக இருந்து, உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகப் பராமரித்து, நல்ல மன ஆரோக்கியத்துடன் இருந்தால்.. உங்கள் மலத்தை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹ்யூமன் மைக்ரோப்ஸ் நிறுவனம்.. ஒரு முறை வாங்க USD 500 (ரூ. 41,000) தருகிறார்களாம்.. நீங்கள் தினசரி மலத்தைக் கொடுக்க தயார் என்றால் ஆண்டுக்கு சுமார் $180,000 (ரூ. 1 கோடியே 40 லட்சம்) தர ரெடியாக இருக்கிறார்கள்.
இதைப் படிக்கும் பலரும் இதை ஏதோ ஜோக் என்றே நினைப்பார்கள்.. ஆனால், இது ஜோக் எல்லாம் இல்லை.. 100% உண்மைதான்.. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் மலத்தை தானம் செய்பவரைத் தேடி வருகிறது.. இது யாராவது ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
என்ன செய்வார்கள்: முறையாக பிராசஸ் செய்யப்பட்டு, அதாவது கிருமி நீக்கம் செய்யப்பட்ட மலத்தை வயிற்றுப் பிரச்சனைகளால் அவதிப்படும் நபரின் உடலில் செலுத்தினால் அது பிரச்சினையைச் சரி செய்யும் என்பதே இவர்கள் கருத்தாக உள்ளது. இது பல விதமான குடல் நோய்களை மட்டுமின்றி, கடுமையான மனநலப் பிரச்சினைகளைக் கூட குணப்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் தான் மலத்தை வைத்து இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2020இல் மைக்கேல் ஹாரோப் என்பவர் தொடங்கிய இந்த நிறுவனம், அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து பெரும்பாலும் மலத்தை ஆய்வுக்காகப் பெறுகிறது.. அதேநேரம் உலகெங்கும் இருந்தும் கூட மலத்தை ஆய்வுக்காகப் பெறத் தயாராக உள்ளதாக அந்த நிறுவனம் தனது இணையத்தில் தெரிவித்துள்ளது.
வல்லுநர்கள்: இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "ஒரு ஆரோக்கியமான நபரின் மலத்தை பிராசஸ் செய்து நோயாளியின் இரைப்பைக் குழாயில் செலுத்தி.. அதன் மூலம் ஒரு சீரான நுண்ணுயிரியை மீட்டெடுப்பதே இவர்கள் திட்டம். இது கடுமையான பெருங்குடல் நோய்த்தொற்றான க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் இன்ஃபெக்ஷனுக்கு சரியான சிகிச்சையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், இது இப்போது தான் முதற்கட்ட ஆய்வில் இருக்கிறது" என்றார்.
பை பேலார் பிரச்சினை போன்ற மனநல சிக்கல்களுக்கும் இது தீர்வாக இருக்குமாம். இதற்காகவே அந்த நிறுவனம் மலத்தைத் தானமாகக் கேட்கிறது. அதேநேரம் அனைவராலும் மலத்தைத் தானமாகத் தந்துவிட முடியாது.. இதற்கு சில கட்டுப்பாடுகளையும் வைத்துள்ளனர். அதாவது மலத்தை நன்கொடையாகத் தருபவர்கள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கொண்ட நபராக இருக்க வேண்டும்.
தானம்: பிறகு சில டெஸ்டிங் நடத்தப்பட்டு.. அதில் ஓகே என்றால் உங்களிடம் இருந்தும் மலத்தை இந்த நிறுவனம் தானமாகப் பெற்றுக் கொள்ளுமாம். அதேநேரம் அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு அமைப்பு மனித மலத்தை வைத்து இதுபோல ஆய்வு செய்தால் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications