அமெரிக்கா அதிபர் தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு நேரம் என்ன?.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைவரும் எதிர்பார்க்கும் அதிபர் தேர்தல் என்று எப்போது நடைபெறுகிறது?
கொரோனாவுக்கு மத்தியில் உலகமே உற்றுநோக்குவது அமெரிக்க அதிபர் தேர்தல்தான். இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பும் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.
ஏற்கெனவே அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு எதிரான விசா உள்ளிட்ட பிரச்சினைகளை கொடுத்து வந்தார். அது போல் கருப்பர்களுக்கு எதிராக இனவாதத்தையும் அவர் முன் வைத்ததாகவே குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும் இந்தியாவையும் மோடியையும் தனது நட்பு நாடு, நண்பன் என கூறிய டிரம்ப், அதிபர் தேர்தலுக்கான விவாதங்களில் இந்தியாவை வம்பிழுத்தார். இது இந்தியர்களை முகம் சுளிக்க வைத்தது.
டிரம்பின் இந்த கருத்துகளை ஜோ பிடன் கண்டித்தார். இதையடுத்து அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு ஜோ பிடன் பக்கம் உள்ளது. இந்த நிலையில் அதிபர்களுக்கான விவாதங்கள் நடந்து முடிந்து தற்போது பிரசாரங்களும் ஓய்வு பெறவுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு - வெள்ளை மாளிகை யாருக்கு?
இந்த தேர்தலில் கொரோனா வைரஸ் நிச்சயம் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது. அமெரிக்கா எனும் வல்லரசு நாட்டின் அதிபர் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதாவது மாதத்தின் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த தினமே இது நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் உரிமை அமெரிக்காவில் இருப்பதால் ஏராளமானோர் வாக்களித்துவிட்டார்கள். ஏன், டிரம்பும் வாக்களித்துவிட்டார்.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரமும் முடிவடையும் நேரமும் மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும். பெரும்பாலும் நியூயார்க் மற்றும் வடக்கு டகோட்டாவில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த வாக்குப் பதிவு இரவு 9 மணிக்கு முடிவடையும். வெர்மண்ட்டில் காலை 5 மணிக்கெல்லாம் வாக்குப் பதிவு நடைபெறும்.
வடக்கு கரோலினா, புளோரிடா, மிக்சிகன், விஸ்கான்சின், அரிசோனா ஆகிய மாகாணங்களின் தேர்தல் முடிவுகளே இந்த ஆண்டு தேர்தலில் முக்கிய இடம்பெறும்.