இரவோடு இரவாக டிரம்ப் உத்தரவு.. H-1b விசா லாட்டரி முறை நீக்கம்.. இந்தியாவுக்கு தான் பெரிய சிக்கல்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு விசா முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வருகிறார். இதற்கிடையே அங்கு லாட்டரி அடிப்படையில் வழங்கப்படும் விசா முறையை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாட்டரி முறைக்குப் பதிலாக அதிகத் திறமை மற்றும் அதிக ஊதியம் வாங்குவோருக்கு விசா கிடைக்கும் வகையில் சிஸ்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.
திறமையான ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வரும் வகையில் H-1B விசாவை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. இந்த விசாவின் கீழ் திறமையான ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர முடியும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விசா முறை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் திறன் குறைந்த ஊழியர்களும் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.

லாட்டரி முறை நீக்கம்
அங்குள்ள வலதுசாரி அமைப்புகள் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இப்படி H-1B விசா முறையில் அதிகளவில் வெளிநாட்டினர் வருவதால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அமெரிக்க அதிபரான டிரம்ப்பும் H-1B விசாவில் மோசடி நடப்பதாகவே சொல்லி வந்தார். மேலும், அதில் பல மாற்றங்களையும் அவர் அறிவித்து வருகிறார். அதன்படி இப்போது அங்கு லாட்டரி முறை நீக்கப்படுகிறது.
அமெரிக்காவில் தற்போது வரை H-1B விசா ஒதுக்கீடு செய்ய லாட்டரி முறையே பின்பற்றப்படுகிறது. அதாவது அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 65,000 ரெகுலர் H-1B விசா மற்றும் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தோருக்கு 20,000 H-1B விசா என மொத்தம் 85,000 H-1B விசாக்கள் வழங்கப்படுகிறது. இந்த லிமிட்டை தாண்டி அதிக விண்ணப்பம் வரும்போது லாட்டரி முறை பின்பற்றப்படும்.
லாட்டரி முறை என்றால் என்ன
அதாவது 85 ஆயிரம் விசாவுக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்றால்.. அந்தச் சூழல்களில் கம்ப்யூட்டர் அடிப்படையிலான லாட்டரி முறையில் விசா ஒதுக்கப்படும். இருப்பினும், இந்த லாட்டரி முறையைப் பல்வேறு தரப்பினரும் எதிர்த்தனர். குறிப்பாக டிரம்ப் இந்த லாட்டரி முறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். லாஜிக்கே இல்லாத இந்த முறையை நீக்க வேண்டும் எனச் சாடினார்.
இந்தச் சூழலில் தான் லாட்டரி அடிப்படையிலான விசா முறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, அதிகத் திறமை மற்றும் அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய மதிப்பீட்டு முறை அமலுக்கு வரும். இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து செல்வோர் விசா பெறுவது கடினமாகலாம் எனச் சொல்லப்படுகிறது.
டிரம்ப் தரப்பு
H-1B விசா திட்டத்தின் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்திக் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சில நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வருவதாகவும் அதை இந்த மாற்றம் தடுக்கும் என அமெரிக்கா கூறுகிறது. இந்த புதிய விதி 2026ம் ஆண்டு பிப்ரவரி 27முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு H-1B விசா வழங்கும் முறை மொத்தமாக மாற்றி அமைக்கப்படுகிறது.
மாற்றங்கள்
வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வரும் வழிகளில் டிரம்ப் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் தான் விசா கட்டணத்தை 4,500 டாலரில் இருந்து 100,000 டாலராக உயர்த்தினார். அதாவது ஒரே முறையில் 2,122% உயர்த்தினார். இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வழக்கு அங்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்கச் செல்வந்தர்கள் ஈஸியாக அமெரிக்க வரும் வகையில் கோல்டன் கார்டு என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதன் கீழ் $1 மில்லியன் டாலர் கொடுத்தால் ஈஸியாக "கோல்ட் கார்டு" விசாவை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications