நண்பனின் பேஸ்புக் பதிவால் வந்த ஐடியா! ஒரே நாளில் ரூ.3 கோடியை லாட்டரியில் அள்ளிய அதிர்ஷ்டசாலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் லாட்டரி மேல் பெரிதும் இஷ்டம் இல்லாத நபர் ஒருவர் தனது நண்பனின் பேஸ்புக் பதிவை பார்த்து எதேச்சையாக லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது இந்த லாட்டரிக்கு இந்திய மதிப்பில் ரூ.3.20 கோடி பரிசு அடித்துள்ளது. இதனால் அந்த நபர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
சினிமாவில் வருவது போல ஒரே பாட்டில் பணக்காரர் ஆகுவது நிஜ வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்றால் லாட்டரியில் பணம் அடித்தால்தான் என்று பொதுவாக சிலர் சொல்வார்கள். லாட்டரியில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. இப்படி அடிக்கும் அதிர்ஷ்டம் ஒருவரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடும்.

அதே வேளையில் லாட்டரியில் பணம் வென்றவர்களை விட பணத்தை இழந்தவர்களே அதிகம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. பணம் அடிக்கும் என்ற ஆசையில் பல ஆயிரத்தை இழந்து கடைசியில் பெரிய பொருளாதார இழப்பிற்கும் லாட்டரி தள்ளிவிடும் என்ற கூற்றும் உள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
இந்தியாவில் கேரளா, அசாம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி இருப்பது போல அமெரிக்காவிலும் பல்வேறு மாகாணங்களில் லாட்டரிக்கு அனுமதி இருக்கிறது. இங்கு எதிர்பாராத விதமாக வாங்கிய லாட்டரியால் கோடீஸ்வரர் ஆகிவிட்டேன் என அடிக்கடி சிலர் சிலாகித்துக்கொள்ளும் சம்பவங்கள் வைரல் செய்தியாகும்.
அந்த வகையில் தான் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தனது நண்பர் செய்த ஒரு காரியத்தால் பல கோடிக்கு அதிபதியாகியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:- மெல்வின் புருக்ஸ்க்கு லாட்டரி மீது பெரிதாக நாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்காமலே இருந்து இருக்கிறார்.
திடீரென ஒருநாள் புரூக்ஸ் நண்பர் தனது பேஸ்புக்கில் தனக்கு 100 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரம்) லாட்டரியில் பரிசாக அடித்தது என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த மெல்வின் புரூக்ஸ், நாமும் ஏன் ஒரு லாட்டரியை வாங்க கூடாது என்று நினைத்து இருக்கிறார். உடனடியாக மவுண்ட் ஹோல்லி பகுதிக்கு சென்று அங்கிருந்த கடையில் ஸ்க்ராட்ச் லாட்டரியை வாங்கியிருக்கிறார்.
400 ரூபாய் கொடுத்து வாங்கிய அவருக்கு $400,000 பரிசாக கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில கிட்டத்தட்ட 3.20 கோடி ரூபாய் அடித்துள்ளது. ஒரு நிமிடம் தலை சுற்றி போன ப்ரூக்ஸ், மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். தற்போது அடித்துள்ள இந்த பரிசுத்தொகையை கொண்டு தனது கடன்களை அடைப்பேன், மனைவி மற்றும் மகள்களுக்கு பகிர்ந்து கொடுப்பேன் என்று உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கிறாராம் புரூக்ஸ்.












Click it and Unblock the Notifications