கிரீன்லாந்தில் இறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்.. திடீர் பதற்றம்.. என்ன தான் நடக்கிறது?
வாஷிங்டன்: கிரீன்லாந்து பகுதியை வாங்கப் போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லி வருகிறார். இந்தச் சூழலில் திடீரென அமெரிக்கா- கனடாவின் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கமாண்ட், அதாவது நோராட் விமானங்கள் இப்போது கிரீன்லாந்திற்கு செல்கிறது. நோராட் விமானங்கள் இப்போது கிரீன்லாந்து செல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கிரீன்லாந்தை வாங்கப் போவதாகச் சொல்லி வருகிறார். கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்படி ஒப்படைக்கவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை கூட எடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். டிரம்ப்பின் இந்தப் பேச்சுகள் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

கிரீன்லாந்தில் அமெரிக்க போர் விமானங்கள்
இந்தச் சூழலில் NORAD எனப்படும் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கமாண்ட் விமானத்தை கிரீன்லாந்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அந்த விமானம் கிரீன்லாந்தில் உள்ள பிடூஃபிக் விண்வெளி தளத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. டிரம்பின் தடாலடி பேச்சுகளுக்கு மத்தியில் அமெரிக்க- கனடா நாடுகளின் போர் விமானம் கிரீன்லாந்துக்குச் சென்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நோராட் அறிவிப்பு
நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த விமானம் அனுப்பப்படுவதாக நோராட் தெரிவித்துள்ளது. மேலும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் ஒருங்கிணைந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.. இது தொடர்பாக அந்த அமைப்பு மேலும், "வட அமெரிக்க வான் பாதுகாப்பு கமாண்ட்(NORAD) விமானங்கள் விரைவில் கிரீன்லாந்தின் பிடூஃபிக் விண்வெளி தளத்திற்குச் செல்லவுள்ளன.. அமெரிக்கா, கனடாவின் பகுதிகளில் உள்ள தளங்களின் விமானங்களுடன் இணைந்து, இவை NORAD செயல்பாடுகளுக்கு உதவும். அமெரிக்கா, கனடா, டென்மார்க் இடையேயான நீடித்த தற்காப்பு ஒத்துழைப்பிற்கு இது வலுச் சேர்க்கும் " என்று கூறப்பட்டுள்ளது.
NORAD என்பது அமெரிக்கா கனடா நாடுகளுக்கு இடையே இருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டமைப்பாகும். வட அமெரிக்கப் பாதுகாப்பிற்காக அதன் மூன்று பிராந்தியங்கள் வழியாக (அலாஸ்கா, கனடா, அமெரிக்கக் கண்டப் பகுதிகள்) NORAD வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது வழக்கமான நடவடிக்கை தான் என்றாலும் கிரீன்லாந்து குறித்து டிரம்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மத்தியில் இது நடந்துள்ளதாக இது கவனம் பெற்றுள்ளது.
அதிகரிக்கும் பதற்றம்
டிரம்ப்பின் கிரீன்லாந்து மிரட்டல்களுக்கு ஐரோப்பிய தலைவர்கள் வலுவான பதிலடியைக் கொடுத்து வருகிறார்கள். ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், நார்வே, நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை கிரீன்லாந்துக்கு அனுப்பி, டென்மார்க் நடத்திய ராணுவப் பயிற்சியில் பங்கேற்றன.
இதற்கிடையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் தனது முயற்சியை எதிர்த்தால் டென்மார்க் மற்றும் இங்கிலாந்து உட்பட நாடுகள் மீது வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்ப் தடாலடி
பிப்ரவரி 1 முதல் 10% வரி விதிக்கப்படும் என்றும் வகும் ஜூன் 1 முதல் வரி 25% ஆக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார். பல ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற பிறகு, டென்மார்க் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறினார். விரைவில் கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications