"கறுப்பினத்தவர் எல்லாம் அடிமைகள் தான்" சொன்னது டிரம்ப் இல்லை கமலா ஹாரிஸ் கட்சி! இந்த வரலாறு தெரியுமா
வாஷிங்டன்: வெள்ளை இன மக்களுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது.. அமெரிக்காவில் இந்த கருத்துகளை எல்லாம் யார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. பொதுவாக இதுபோன்ற இனவெறி கருத்துகளைப் படிக்கும் போது டிரம்ப் தான் இதுபோல சொல்லி இருப்பார் என்றே நாம் நினைப்போம். ஆனால், உண்மையில் இதைச் சொன்னது கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி.. அவர்கள் ஏன் இப்படிச் சொன்னார்கள்.. கடந்த கால வரலாறு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு ஜனநாயக கட்சி சார்பில் இப்போது கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார். முதல் பெண் அமெரிக்க அதிபராகக் கமலா ஹாரிஸ் வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.

ஜனநாயக கட்சி: அவர் போட்டியிடும் ஜனநாயக கட்சி இப்போது பொருளாதார சமத்துவமின்மை, கறுப்பினத்தவர் உரிமை, பாலின பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. ஆனால், ஜனநாயக கட்சி எப்போதும் இதுபோல இருந்தது இல்லை. ஜனநாயக கட்சியின் கடந்த காலத்தை எடுத்துப் பார்த்தால் அது நமக்குப் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும்.
ஆம், இதே ஜனநாயக கட்சி தான் ஒரு காலத்தில் கட்சி ஒரு காலத்தில் வெள்ளை இனத்தவருக்கே எல்லா அதிகாரமும் இருக்கிறது, அடிமை முறை சரியானது, கறுப்பினத்தவருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்று சொல்லி இருக்கிறது. குறிப்பாக வெள்ளை இனத்தவரின் தீவிரவாத இயக்கமான கு க்ளக்ஸ் கிளான் என்ற அமைப்பைக் கூட ஆதரித்துள்ளது. அப்படி இருந்த கட்சி இப்போது எப்படி தலைகீழாக மாறி கறுப்பினத்தவர் உரிமைக்காகப் போராடும் நிலைக்கு வந்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம்.
ஜனநாயக கட்சியின் வரலாறு: அமெரிக்காவில் தற்போதுள்ள கட்சிகளில் பழமையானது ஜனநாயக கட்சி தான். 1820களில் ஜனநாயக கட்சி முதலில் உருவானது. அப்போது அரசியல் சரியில்லை.. அனைத்தையும் மாற்றப் போகிறேன் என்று முன்னாள் ராணுவ ஜெனரல் ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவரும் கிட்டதட்ட டிரம்ப் போலத் தான்.. அரசியலில் அனுபவம் எதுவும் இல்லை. இதனால் மற்ற அரசியல்வாதிகள் இவரைக் கழுதை எனக் கூட விமர்சித்தார்கள்.
அதையே தனது பிளஸ் பாயிண்டாக மாற்றிய இவர், கழுதை போல உங்களுக்காக வேலை செய்வேன் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் வென்று அதிபராகவும் ஆனார். அதிபர் தேர்தலில் வென்ற பிறகு அவர் எடுத்த நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருந்தது. மிசிசிப்பி ஆற்றின் கிழக்கே இருந்த பூர்வீக அமெரிக்கர்களை அவரது அரசு வெளியேற்றியது. இதை 1830ல் சட்டமாகவே நிறைவேற்றியது.
அடிமை முறை: ஜனநாயக கட்சியே தொடர்ந்து ஆட்சியில் இருந்த நிலையில், அவர்கள் வட அமெரிக்கக் கண்டத்தையே ஆளும் உரிமை வெள்ளை இன மக்களுக்கே இருப்பதாகச் சொல்லிப் பல மாகாணங்களை தங்களுடன் இணைத்தனர். எல்லாமே அவர்களுக்கு நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது. அப்போது திடீரென 1860ல் புதிதாக உருவான குடியரசு கட்சியின் வேட்பாளர் லிங்கன் அதிபராகத் தேர்வானார். அவர் எங்கு அடிமை முறையை ஒழித்துவிடுவாரோ என நினைத்து ஜனநாயக கட்சி செல்வாக்குடன் இருந்த மாகாணங்கள் தனியாகப் பிரிந்து சென்றன. இது அங்கு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தியது.
உள்நாட்டுப் போருக்குப் பிறகு அங்குக் குடியரசு கட்சி அடிமை முறையை ஒழித்தது. அதன் பிறகு அங்கு அரசியல் சூழல் அப்படி இருந்தது. குடியரசு கட்சி செல்வாக்கு அப்போது அதிகமாக இருந்த நிலையில், அக்கட்சி மெல்லத் தொழிலதிபர்களைக் கொண்ட கட்சியாக மாறியது. இருப்பினும், அரசியல் ரீதியாக பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் 20ம் நூற்றாண்டில் அமெரிக்கா வேகமாக வளர்ந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் தொழிலதிபர்கள் முழுமையாகக் குடியரசு கட்சி பக்கம் சென்றுவிடவே, ஜனநாயக கட்சியும் மெல்ல சராசரி மக்களின் வாழ்க்கை நிலை குறித்துப் பேசத் தொடங்கியது.
மாறிய வரலாறு: 1912இல் அதிபரான வூட்ரோ வில்சன் கொண்டு வந்த திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு குறிப்பாக 1930ல் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது அதிபரான ஜனநாயக கட்சியின் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கொண்டு வந்த திட்டங்கள் மிக பெரிய வரவேற்பைச் சாதாரண உழைக்கும் வர்க்கத்தினர் இடையே பெற்றுத் தந்தது. இதனால் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகளவில் ஜனநாயக கட்சி பக்கம் வந்தனர்.
இறுதியாக 1964ல் ஜனநாயக கட்சி ஆட்சியில் கறுப்பினத்தவர் உரிமையைப் பாதுகாக்க சிவில் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், கறுப்பினத்தவரும் மொத்தமாக ஜனநாயக கட்சி பக்கம் வந்தனர். காலப்போக்கில் வெள்ளை இனத்தவரைத் தவிர மற்ற சிறுபான்மையினர் ஜனநாயக கட்சிக்கு அதிகம் ஆதரவளித்தனர். அமெரிக்காவில் மெக்சிகோவில், ஆசிய உள்ளிட்ட மற்ற நாட்டின் மக்கள் அதிகம் குடியேற குடியேற ஜனநாயக கட்சியின் செல்வாக்கு அதிகரித்தது.
கறுப்பின அதிபர்: இதன் காரணமாகவே ஒரு காலத்தில் அடிமை முறையை ஆதரித்த ஜனநாயக கட்சியில் இருந்தே முதல் கறுப்பின அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்வானார். இப்போது சுமார் 8 ஆண்டுகள் கழித்து கறுப்பினத்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். அவர் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பை பெறுவார். அடிமை முறை, ஆண் ஆதிக்கத்தை ஆதரித்த கட்சியாலேயே இப்போது அங்கு இந்த பெரிய மாற்றங்கள் நடப்பது அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதையே காட்டுகிறது.












Click it and Unblock the Notifications