மூன்று இந்திய தொழிலதிபர்களுக்கு தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவுக்கு என்ன காரணம்! பின்னணி
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாகவே நல்லுறவு இல்லை. டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது 3 இந்தியத் தொழிலதிபர்கள் மீது திடீரெனப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. யார் அந்த இந்தியத் தொழிலதிபர்கள்.. அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட என்ன காரணம்! இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சீரான உறவு இருந்து வந்தது. இரு தரப்பு உறவில் எந்தவொரு பெரிய சிக்கலும் இல்லாமலேயே இருந்தது. ஆனால், இந்தாண்டு டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு அது மொத்தமாக மாறியது. கடந்த சில மாதங்களாக அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் இரு தரப்பு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தியத் தொழிலதிபர்களுக்குத் தடை
இதற்கிடையே இந்தியர்கள் சிலர் மீது டிரம்ப் அரசு இப்போது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரான் உடன் எண்ணெய் வர்த்தகம் செய்வதால் இந்தத் தடையை விதிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி, ஈரானின் எரிசக்தி வணிகத்துடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா இந்த புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலமாகவே நிதி கிடைப்பதாகவும் அந்த நிதியைத் துண்டிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள 3 இந்திய தொழிலதிபர்கள், ஈரானின் எண்ணெய் மற்றும் எல்பிஜி வாயுக்களைச் சர்வதேச சந்தையில் விற்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா சொல்வது என்ன
டிரம்ப் அரசு எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஈரானில் பணப் புழக்கம் குறைந்துள்ளதாக அமெரிக்க டிரஷரி துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூருகையில் "ஈரானின் எரிசக்தி ஏற்றுமதியை நாங்கள் முடக்குகிறோம். இதன் மூலம் ஈரானுக்கு வரும் பணப் புழக்கம் குறைகிறது. ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவை அச்சுறுத்தும் பயங்கரவாத குழுக்களை முடக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றார்.
யார் இவர்கள்!
இந்தப் பட்டியலில் வருண் புலா, சோனியா ஸ்ரேஷ்டா மற்றும் ஐயப்பன் ராஜா ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஈரானின் எண்ணெய் மற்றும் எல்பிஜி-ஐ சர்வதேச சந்தையில் விற்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் வருண் புலா, மார்ஷல் தீவுகளில் இயங்கும் பெர்தா ஷிப்பிங் என்ற நிறுவனத்தின் உரிமையாளர். இந்த நிறுவனம் PAMIR என்ற கப்பலை இயக்கி வருகிறது. இக்கப்பல் ஜூலை 2024 முதல் கிட்டத்தட்ட 40 லட்சம் பீப்பாய் ஈரான் எல்பிஜி-ஐ சீனாவிற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தடை
அடுத்து ஐயப்பன் ராஜா.. இவரும் மார்ஷல் தீவுகளில் ஈவி லைன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது கப்பல் கடந்த ஏப்ரல் முதல் 10 லட்சம் பீப்பாய் ஈரான் LPGஐ சீனாவிற்கு எடுத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடுத்து சோனியா ஸ்ரேஷ்டா.. இந்தியாவில் இவர் நடத்தி வரும் வேகா ஸ்டார் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் தனது கப்பல் மூலம் ஈரான் எல்பிஜியை பாகிஸ்தானுக்கு எடுத்துச் சென்றுள்ளது.
இதன் மூலம் ஈரானுக்குப் பல பில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்பட்டதாகவும் இது தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டுகிறது. இதன் காரணமாகவே பொருளாதாரத் தடை விதிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications