உள்ளே வரும் அமெரிக்கா! சிரியாவில் உள்ள ஈரான் இலக்குகள் மீது அட்டாக்! மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்
வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் போர் ஒரு பக்கம் தொடரும் நிலையில், மற்றொரு புறம் சிரியாவில் இருக்கும் ஈரான் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் யுத்தம் 20 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கே பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

எங்கே இந்தப் போர் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சம் தான் இப்போது அதிகமாக இருக்கிறது. இதற்கிடையே பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான சம்பவம் இப்போது நடந்துள்ளது.
அமெரிக்கா அட்டாக்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், கிழக்கு சிரியாவில் ஈரான் இலக்குகளை மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இங்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் படை மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் பயன்படுத்தி வரும் இரண்டு தளங்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் சமீப காலமாக நடந்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.. ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் இடையே யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது அமெரிக்காவும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
தொடரும் தாக்குதல்: இஸ்ரேல் ஹமாஸ் மோதல் ஆரம்பித்தது முதலே அப்பகுதியில் இருக்கும் அமெரிக்கப் படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடந்துள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகள் மீது 12 முறையும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது 4 முறையும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களே இந்தத் தாக்குதலை நடத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக 21 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதிர்ச்சியால் ஏற்படும் மூளைக் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் அமெரிக்கா இப்போது ஈரான் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
அமெரிக்கா அறிவிப்பு: இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த துல்லியமான தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தும் தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஈரான் குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்தால் எங்கள் படைகளைப் பாதுகாக்கத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பைடனின் உத்தரவின் பெயரில் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
வான்வழித் தாக்குதல்: அமெரிக்கப் படைகளை ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குவது அதற்கு அமெரிக்கப் படைகள் பதிலடி கொடுப்பதும் அப்பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து நடக்கும். கடந்த மார்ச் மாதம், ஈரான் குழுக்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க காண்டிராக்டர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் அமெரிக்க ராணுவம் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சரமாரியாக வான்வழித் தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் பைடன் சமீபத்தில் தான் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை தொடர்பு கொண்டு கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்க படைகள்: ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எழுச்சி பெறுவதைத் தடுக்கவும் உள்ளூர் படைகளுக்கு உதவவும் சிரியாவில் 900 வீரர்களையும், அண்டை நாடான ஈராக்கில் 2,500 வீரர்களையும் அமெரிக்கா ராணுவம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களிலும் பரவலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்படிப் பரவினால் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.
மேலும், மத்திய கிழக்கில் பல இடங்களில் அமெரிக்கா படைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதில் அவர்களும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் தான் ஏமன் கடற்கரையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகள் அனுப்பிய 10க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அமெரிக்கப் போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது. இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் அது அங்குள்ள அமெரிக்கப் படைகளுக்கு மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்யும்.












Click it and Unblock the Notifications