US Tariff: இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்திய டிரம்ப்! தொடரும் அமெரிக்காவின் அடாவடி
வாஷிங்டன்: இந்தியாவுக்கு ஏற்கனவே 25 சதவீத வரியை விதித்த டொனால்ட் டிரம்ப் இன்று கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ளார். இதன்மூலம் 50 சதவீத வரியை நம் நாட்டின் மீது டிரம்ப் போட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டொனால்ட் டிரம்ப் இந்த அடாவடி வரி விதிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல நாடுகளுக்கும் வரிகளை விதித்து வருகிறார். நம் நாட்டை இப்போது சீண்ட தொடங்கி உள்ளார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யா நமக்கு நட்பு நாடு. இதனால் நாம் எந்த பொருளாதார தடைகளையும் விதிக்கவில்லை. அதுமட்டுமின்றி வழக்கம்போல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கி வருகிறோம். ஆனால் டிரம்புக்கு இது பிடிக்கவில்லை.
நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவை பிரிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். மேலும் தற்போது ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு அதிகப்படியான கச்சா எண்ணெய்களை வாங்கி வருகிறது. இது டிரம்பின் கண்களை உறுத்துகிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உக்ரைன் போருக்கு உதவுவதாக டிரம்ப் கூறினார். மேலும் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால் நம் நாட்டை எடுத்து கொண்டால் கச்சா எண்ணெயில் 20 சதவீதம் மட்டுமே இங்கு உற்பத்தியாகிறது. மீதமுள்ள 80 சதவீதம் பிற நாடுகளிடம் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த 80 சதவீதத்தில் ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே 36 முதல் 38 சதவீதம் வரை மாதந்தோறும் கிடைக்கிறது. இதனால் சட்டென ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது. மீறி நிறுத்தினால் அது கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் என்பதோடு, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கும்.
இதனால் நம் நாடு தொடர்ந்து ரஷ்யாவிடம், கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இது டொனால்ட் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்ட 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
அதன்படி கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்பிறகு இன்று விதிக்கப்பட்ட 25 சதவீத வரி அடுத்த 21 நாட்கள் கழித்து வர உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நம் நாட்டுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.











Click it and Unblock the Notifications