"கவனமா இருங்க" அமெரிக்க பெண்கள் இந்தியாவுக்கு தனியாக செல்லவே வேண்டாம்! டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்: ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இதற்கிடையே இந்தியா செல்லும் அமெரிக்கப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு அரசு திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாகப் பெண்கள் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையே கடந்த 20, 30 ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் அமெரிக்காவிற்குப் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக அமெரிக்கா செல்கிறார்கள். அதேபோல அமெரிக்காவில் இருந்தும் பெரியளவில் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.

அமெரிக்க வெளியுறவுத் துறை
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு திடீரென பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இந்தியா செல்லும் பயணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16ம் தேதி இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது. குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்தியாவில் சில பகுதிகளில் ஆபத்து அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், "இந்தியாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் பாலியல் வன்கொடுமை உட்பட வன்முறைக் குற்றங்கள் நடக்கின்றன. மேலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி தீவிரவாத தாக்குதல்களும் நடக்கலாம். தீவிரவாதிகள் சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள்/ ஷாப்பிங் மால்கள், அரசு அலுவலகங்களைக் குறிவைக்கலாம்.
எச்சரிக்கை
குறிப்பாகக் கிராமப் புறங்களுக்குச் செல்லும் அமெரிக்கக் குடிமக்களுக்கு உடனடியாக அவசர சேவைகளை அமெரிக்க அரசால் வழங்க முடியாது. இந்த பகுதிகள் கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு தெலுங்கானா முதல் மேற்கு வங்கம் வரை நீண்டுள்ளன. இந்த எச்சரிக்கை காரணமாக, இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்கள் இந்த மாநிலங்களுக்குச் செல்லும் முன்பு சிறப்பு அனுமதி பெற வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா செல்லும் பயணிகள் என்ன செய்யலாம்.. என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும் விரிவான அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் சாட்டிலைட் செல்போன் சட்டவிரோதமானது.. மீறினால் 200,000 டாலர் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதால் அதை வைத்திருக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தனியாகச் செல்ல வேண்டாம்
மேலும், "தனியாகப் பயணம் செய்ய வேண்டாம், குறிப்பாக நீங்கள் பெண்ணாக இருந்தால் தனியாகப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்" என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் கூடுதல் கவனம் தேவைப்படும் பகுதிகளாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
எந்த மாநிலங்கள்!
அமெரிக்க அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட மாநிலத்தின் தலைநகரைத் தாண்டி பயணிக்கவே முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மேகாலயா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதி மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்குப் பயணிக்கவும் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அடிவரவு நடவடிக்கை அபாயம் இருப்பதால், அமெரிக்கக் குடிமக்கள் இந்தியா-நேபாள எல்லையைத் தரை வழியாகக் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் சிறப்புக் கவனம் தேவை என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications