இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்கா.. முக்கியமான விசா ரூல்ஸ் மாற்றம்.! தொடரும் டிரம்ப் அரசின் அடாவடி
வாஷிங்டன்: டிரம்ப் அரசு அமெரிக்க விசாவுக்கான கட்டுப்பாடுகளை நாளுக்கு நாள் கடுமையாக்கிக் கொண்டே போகிறது. இதற்கிடையே குறுகிய கால விசா முறையில் இருந்த முக்கியமான ஒரு வசதியை அமெரிக்கா நீக்கியுள்ளது. இது நேரடியாகவே இந்தியாவில் இருந்து விசா கோரி விண்ணப்பிப்போருக்குச் சிக்கலையே தரும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டினருக்கு எதிராகவே டிரம்ப் அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றவர்கள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குச் சென்றவர்கள் மீதும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

நீக்கிய டிரம்ப் அரசு
இதற்கிடையே விசா நடைமுறையில் இருந்த மற்றொரு தளர்வை டிரம்ப் அரசு நீக்கியுள்ளது. இது நேரடியாகவே இந்தியர்களுக்கு மேலும் சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது. விசா நடைமுறைகளை டிரம்ப் அரசு தொடர்ந்து கடுமையாக்கி வரும் நிலையில், இந்த உத்தரவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதன்படி NIV எனப்படும் அமெரிக்காவிற்கான குடியேற்றமல்லாத விசா கோரி விண்ணப்பிப்போர் நேர்காணலைத் தங்கள் சொந்த நாட்டில் அல்லது சட்டப்பூர்வமாக வசிக்கும் நாட்டிலேயே மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை சீக்கிரமாக அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டிய இந்தியர்கள், பி1 (பிஸ்னஸ்) அல்லது பி2 (சுற்றுலா) விசா கோரி விண்ணப்பிக்கும்போது, மற்ற நாடுகளில் நேர்காணல்களை ஷெட்யூல் செய்வார்கள்.
என்ன நடைமுறை?
அதாவது இந்தியாவில் விசா நேர்காணலுக்குக் காத்திருக்கும் காலம் அதிகமாக இருந்தால் பலரும் காத்திருப்பு நேரம் குறைவாக இருக்கும் நாடுகளில் நேர்காணலுக்கு விண்ணப்பிப்பார்கள். கொரோனா காலத்தில் இந்தியாவில் விசா காத்திருப்பு காலம் மூன்று ஆண்டுகள் வரை நீண்டதால் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது முதலே சீக்கிரமாக அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியர்கள் இந்த முறையை நம்பியிருந்தனர். சுற்றுலா, பிஸ்னஸ், மாணவர் விசா, தற்காலிக ஊழியர்கள் மற்றும் அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்ய உள்ளவர்கள் எனப் பல வகை விசா கோரி விண்ணப்பிப்போர் இந்த நடைமுறையைப் பின்பற்றி வந்தனர்.
நீக்கம்
கொரோனா காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சலுகையை அமெரிக்க வெளியுறவுத்துறை இப்போது ரத்து செய்துள்ளது. மாணவர் (F-1) விசா, விசிட்டர் விசா (B1/B2) விசாக்களுக்கு மட்டுமின்றி, ஒர்க் விசா புதுப்பித்தலுக்கும் விண்ணப்பிக்கும் நபர்களும் கூட இப்போது புதிய ரூல்ஸ் கீழ் தான் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இந்த புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குத் தான் சிக்கல்
இந்த புதிய முறை இந்தியர்களுக்குப் பெரிய சிக்கலைத் தான் தரும். ஏனென்றால் இதற்கு முன்பு வரை அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் இந்தியாவில் நீண்ட காலம் காத்திருப்பைக் குறைக்க துபாய், பாங்காக், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நேர்காணலை ஷெட்யூல் செய்வார்கள். அங்குக் காத்திருப்பு நேரம் பெரிதாக இருக்காது என்பதால் சீக்கிரமே விசா பெறலாம். பிஸ்னஸ் மீட்டிங், திடீர் குடும்ப நிகழ்வுகள் அல்லது கடைசி நிமிடச் சுற்றுலாவுக்குச் செல்வோருக்கு இது ஏற்றதாக இருந்தது. ஆனால் இப்போது இது நீக்கப்பட்டுள்ளது..
இதனால் அதிகம் பாதிக்கப்போவது இந்தியா தான். அதாவது இந்த நடைமுறையால் இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.. இதனால் காத்திருப்பு நேரமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே குறுகிய கால விசாவிற்கான நேர்காணலுக்கு மூன்று முதல் 6.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த புதிய நடைமுறையால் காத்திருப்பு நேரம் மேலும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications