வைட்டமின் டி குறைவு.... கொரோனா தொற்று... உயிரிழப்பை அதிகரிக்கும்... புதிய ஆய்வில் தகவல்!!
வாஷிங்டன்: உடலில் வைட்டமின் டி போதிய அளவு இருப்பவர்களை விட பற்றாக்குறையாக இருப்பவர்களுக்கு எளிதில் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மனித உடலில் எலும்புகள் பலம் பொருந்தியதாக இருப்பதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் முக்கியமானது. இதை சூரிய வைட்டமின் என்று கூறுவதும் உண்டு. உடலில் கொழுப்பை கரைக்கக் கூடிய இந்த வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. ஆதலால் தான் வைட்டமின் டி சத்து உடலில் குறையும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனா வைரஸ் போன்ற நோயையும் ஏற்படுத்துகிறது என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வைட்டமின் டி-க்கும், கொரோனாவுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா நோயாளிகளில் பலருக்கும் வைட்டமின் டி குறைவாக இருந்துள்ளது. வைட்டமின் டி குறைபாடு காரணமாக கொரோனா தொற்று எளிதில் ஏற்படும் என்பது மற்றொரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
யுசிகாகோ மருந்து நிறுவனம் 483 பேரிடம் இதுதொடர்பான ஆய்வு மேற்கொண்டுள்ளது. இவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு ஓராண்டுக்குள் வைட்டமின் டி பரிசோதிக்கப்பட்டது. இவர்களில் வைட்டமின் டி சத்து குறைபாடு இருந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு இரட்டிப்பாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால், தேவையான அளவு வைட்டமின் டி இருப்பவர்களுக்கு தொற்று பாதிப்பில்லை.
சுவாசக்குழாய் வைரஸ் தொற்றுகளை, வைட்டமின் டி, குறைக்கும் என்பது முந்தைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. புதிய ஆய்வும் இதையேதான் தெரிவிக்கிறது என்று யுசிகாகோ மருத்துவ நிறுவனத்தின் தலைமை அதிகாரி டேவிட் மெல்ட்சர் தெரிவித்துள்ளார். அதேசமயம் போதிய அளவில் வைட்டமின் டி மருந்து கொடுப்பதால் கொரோனாவை தடுக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெல்ட்சர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் மே மாதம் ஏஜிங் கிளினிக்கல் அண்ட் எக்ஸ்பெரிமெண்டல் ரிசர்ச் என்ற மருத்துவ இதழில் வெளியாகி இருந்த தகவலில், ''வைட்டமின் டி குறைவாக இருப்பவர்கள்தான் கொரோனா நோயில் அதிகமாக உயிரிழந்து இருக்கின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால்தான் அதிக வயதானவர்களுக்கு வைட்டமின் டி சத்து குறைவாக இருக்கும் என்றும் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வடக்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இருக்கும் மக்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருப்பதால், கொரோனா பாதிப்பும் அதிகமாக இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால்தான் இந்த நாடுகளில் உயிரிழப்பும் அதிகமாக இருந்துள்ளது.
உடலில் அதிகமான புரதச்சத்தை உற்பத்தி செய்வதை வெள்ளை அணுக்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த வெள்ளை அணுக்களை வைட்டமின் டி கட்டுப்படுத்துகிறது. அதிகளவில் புரதச்சத்து உற்பத்தியானால், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை அதிகப்படுத்தும். ஆதலால், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் உடலில் ஒவ்வொருவருக்கும் வைட்டமின் டி சத்து இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆதலால், வைட்டமின் டி சத்து நிறைந்த பொருட்களை இந்த சமயத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். உடலில் எவ்வளவு வைட்டமின் டி சத்து இருக்கிறது என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்து கொண்ட பின்னர், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் வைட்டமின் டி மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications