ஈரானை மொத்தமாக முடக்கும் அமெரிக்கா.. அணுசக்தி திட்டத்தின் இதயமே காலி! துல்லியமாக காய் நகர்த்திய டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா இப்போது நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா மொத்தம் 3 அணுசக்தி தளங்கள் மீது தனது பங்கர் பஸ்டர் பாமை வீசியுள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்திய அந்த மூன்று அணுசக்தி தளங்கள் எவை.. ஏன் இந்த மூன்று தளங்களை அமெரிக்கா தாக்கியது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் கடந்த ஒரு வாரமாக நிலவிய மோதல் இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. நேரடியாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் 3 அணு சக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா தாக்கிய இந்த மூன்று அணு சக்தி நிலையங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

போர்டோவ் அணுசக்தி நிலையம்
இந்த போர்டோவ் அணுசக்தி நிலையம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 100 கிமீ தென்மேற்கில் அமைந்துள்ளது. இதுதான் ஈரானின் மிகவும் ரகசியமான மற்றும் அதிகம் பாதுகாக்கப்பட்ட அணு சக்தி நிலையமாகும். இது மலைகளுக்கு நடுவே பல நூறு அடி கீழே அமைந்துள்ளது. பூமிக்கு அடியில் அமைந்திருந்ததால் இதை இஸ்ரேலால் தாக்க முடியவில்லை. அமெரிக்கா தனது பி2 பாமர் ஜெட் மூலம் பங்கர் பஸ்டர் பாமை வீசியுள்ளது
இந்த போர்டோவ் அணுசக்தி மையம் என்பது ஒரு யூரேனியம் செறிவூட்டல் ஆலையாகும். இந்த இடத்தில் அணுசக்தி திட்டம் மற்றும் அணு ஆயுத திட்டம் என இரண்டிற்குமே யுரேனியத்தை செறிவூட்டியுள்ளனர். வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வெளிநாட்டுக் குறுக்கீடுகளைத் தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏவுகணை தளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதைத் தான் அணுசக்தி மையமாக ஈரான் மாற்றியது.
ரகசியம் காத்த ஈரான்
இப்படியொரு இடம் இருப்பதை முதலில் பல ஆண்டுகள் மறைத்தே வந்தது. இருப்பினும், 2009ஆம் ஆண்டில், மேற்கத்திய உளவு அமைப்புகள் இந்த ஆலையை வெளிப்படுத்தின. அதன் பிறகே ஈரான் அதைச் சர்வதேச அணுசக்தி முகமையகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. இந்த மையம் அவை இரண்டு தனித்தனி பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்தன. இதன் தளம் ரஷ்யாவின் S-300 அமைப்பு உட்பட பல வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டது.. தொடர்ச்சியான குண்டுவீச்சுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
போர்டோவ் மலைகளுக்கு நடுவே ஆழத்தில் இருந்ததே அதற்குப் பாதுகாப்பைக் கொடுத்தது. இஸ்ரேலிடம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டு இதை அவர்களால் தாக்க முடியாது. இஸ்ரேல் ஆயுதங்களை நிலத்திற்கு அடியில் இவ்வளவு தூரம் ஊடுருவ முடியாது. 2015ஆம் ஆண்டில் அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, போர்டோவின் செறிவூட்டல் செயல்பாடு நிறுத்தப்பட்டது. மேலும் அதை அறிவியல் பயன்பாட்டிற்காக மாற்றத் திட்டமிடப்பட்டது.
இருப்பினும், டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் 2018இல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். இதனால் ஃபோர்டோவில் ஈரான் மீண்டும் செறிவூட்டலைத் தொடங்கியது. ஃபோர்டோவ் இப்போது ஈரானின் கடைசி மற்றும் மிக முக்கியமான செறிவூட்டல் ஆலையாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் சுமார் 166 கிலோ 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது.
நடான்ஸ் அணுசக்தி நிலையம்
யுரேனிய செறிவூட்டலின் ஈரானின் கிரீடம் என்று அழைக்கப்படும் நடான்ஸ், தெஹ்ரானுக்கு தென்கிழக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு யுரேனிய செறிவூட்டல் தளமாகும். இந்த மையத்தை ஏற்கனவே இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தளத்தில் யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டுகிறது. இஸ்ரேல் இந்த மையத்தில் தரைக்கு மேலுள்ள பகுதியை அழித்தது.
நடான்ஸின் சில பகுதிகள் நிலத்திற்கு அடியில் இருந்ததாக சொல்லப்பட்டது. ஈரானின் மத்திய பீடபூமியில் உள்ள நடான்ஸ் மையத்தில் வான்வழித் தாக்குதல்களில் நடந்தாலும் சில முக்கிய தளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு அதை நிலத்திற்கு அடியில் கட்டினர். அதைத்தான் இப்போது அமெரிக்கா குறிவைத்துத் தாக்கியுள்ளது.
இஸ்பஹான் அணுசக்தி நிலையம்
1984ஆம் ஆண்டில் சீனாவின் ஆதரவுடன் நிறுவப்பட்டது தான் இந்த இஸ்பஹான் தளம்.. தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் இந்த மையத்தில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட அணு விஞ்ஞானிகளை வேலை செய்கிறார்கள். இதில் பல அதிநவீன உபகரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த அணுசக்தி நிலையம் ஈரானின் அணு ஆயுத திட்டத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. யுரேனியம் மாற்றும் வசதி மற்றும் அணு எரிபொருள் தயாரிப்பு ஆலை ஆகியவற்றை இது கொண்டுள்ளது.
இப்படி அமெரிக்கா தாக்கிய இந்த மூன்று அணு சக்தி நிலையங்களுமே ஈரானுக்கு ரொம்பவே முக்கியம். அதைத் துல்லியமாக டார்கெட் செய்தே அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது.!












Click it and Unblock the Notifications