"அதிபர் ரேஸில் இருந்து விலகியது ஏன்?" முதல்முறையாக மனம் திறந்த ஜோ பைடன்.. மிக முக்கிய தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த அதிபர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகினார். இதற்கிடையே அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பிறகு அதிபர் பைடன் முதல் முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தான் அதிபர் ரேஸில் இருந்து விலகியது குறித்துப் பேசிய அவர், மக்களுக்கு சில கோரிக்கைகளையும் விடுத்தார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிட இருந்தார். இருப்பினும், உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்தன.

இதையடுத்து அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்தார். மேலும், தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அவர் முன்மொழியவும் செய்தார்.
ஜோ பைடன்: இதற்கிடையே அதிபர் ரேஸில் இருந்து விலகிய பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல்முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது நாட்டின் எதிர்காலத்திற்காக இளைய தலைமுறையினருக்கு வழிவிடுவதாகத் தெரிவித்தார். தான் அதிபர் ரேஸில் இருந்து விலகியது குறித்துப் பேசிய அவர், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அதிபர் பைடன், "இளைய தலைமுறைக்கு வாய்ப்பை கொடுப்பதே சிறந்த வழி என்று நான் முடிவு செய்துள்ளேன். நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழி.. இப்போது ஜனநாயகத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்கவே அதிபர் ரேஸில் இருந்து விலகி இருக்கிறேன். நான் இந்த பதவியை மதிக்கிறேன், ஆனால் நான் என் நாட்டை அதைவிட அதிகம் நேசிக்கிறேன். உங்கள் அதிபராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய கவுரவம். ஆனால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது எனது பதவியை விட முக்கியமானது.
ஒன்றுபட வேண்டும்: அமெரிக்க ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும். இதற்காக எனது கட்சியை நான் ஒன்றிணைக்க வேண்டும் என்பது புரிந்தது. அதிபராக நான் செய்த சாதனைகள், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த எனது விஷன் ஆகியவை வைத்துப் பார்க்கும் போது நான் 2ஆவது முறையாக அதிபராகத் தகுதி பெற்றே இருக்கிறேன். ஆனால், ஜனநாயகத்தைக் காப்பது இதை எல்லாம் விட ரொம்பவே முக்கியமானது.
அமெரிக்க மக்களுக்காக பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இந்த இப்போது நாட்டையும் நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்க மக்களிடம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார். அதிபர் ரேஸில் இருந்து 81 வயதான பைடன் விலகி இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் ரேஸில் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.
கமலா ஹாரிஸ்: தொடர்ந்து கமலா ஹாரிஸ் குறித்துப் பேசிய அவர், "கமலா ஹாரிஸ் அனுபவம் கொண்டவர்.. திறமையானவர்.. துணை அதிபராக அவரது செயல்பாடுகள் நிஜமாகவே பாராட்டத்தக்கது. இப்போது அமெரிக்காவை வழிநடத்த அவரை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பொது வாழ்க்கையில் நீண்ட அனுபவத்திற்கு எப்படி ஒரு முக்கியத்துவம் இருக்கிறதோ.. அதேபோல புதியவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
அடுத்து என்ன: இந்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தல் என்பது வரலாற்றில் அரிய தருணங்களில் ஒன்றாகும்.. இப்போது நாம் எடுக்கும் முடிவு தான் அடுத்துப் பல ஆண்டுகளுக்கு அமெரிக்கா மற்றும் உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன. இந்த தேர்தல் என்பது நம்பிக்கைக்கும் வெறுப்புக்கும் இடையே, ஒற்றுமை மற்றும் பிரிவினைக்கு இடையே நடக்கும் தேர்தல். அமெரிக்க மக்கள் சரியான விஷயத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
நேர்மை, கண்ணியம், மரியாதை, சுதந்திரம், நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை அமெரிக்கர்கள் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகத்தைப் பாதுகாக்க நடத்தப்படும் இந்தத் தேர்தலில் அமெரிக்கர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications