பூமிக்கு விசிட் அடித்த ஏலியன்கள்? உலகெங்கும் இருக்கும் "அந்த" பொருள்! வார்த்தையை விட்ட உளவு அதிகாரி
வாஷிங்டன்: யுஎப்ஓக்கள் எனப்படும் பறக்கும் தட்டுக்கள் இப்போது மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போலவே நிச்சயம் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் வாழும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து. இதன் காரணமாகவே மற்ற கிரகங்கள் குறித்து தீவிர ஆய்வுகள் நடந்து வருகிறது.
குறிப்பாக இதில் அமெரிக்கா இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விண்வெளிக்கு சிக்னல்களை அனுப்புவது, தொலைதூர கிரகங்களில் மனிதர்கள் வாழும் சூழல் இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா: இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடா வான் பரப்பில் தொடர்ச்சியாக மர்மப் பொருட்களும் பறந்ததாகத் தகவல் வெளியானது. இது யுஎப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் குறித்துப் பரபரப்பைக் கிளப்பியது. வெளியே எங்கோ இருக்கும் ஏலியன்கள் இந்த பறக்கும் தட்டுகள் மூலமாகவே பூமிக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனால் பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கும்.
இதில் உண்மை எது பொய் எதுவென்றே தெரியாமலேயே இருந்தது. இது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவும் சிறப்புக் குழுவை அமைத்திருந்தது. இதற்கிடையே அமெரிக்க உளவுத் துறை அதிகாரி ஒருவர் இந்த யுஎப்ஓ என்ற பறக்கும் தட்டுகள் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்காவிடம் யுஎப்ஓக்கள் எனப்படும் ஏலியன் வாகனங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் இவர்: டேவிட் க்ரூஷ் என்பவர் தான் இந்த முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் விவரிக்கப்படாத முரண்பாடு நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்யும் அமைப்பிற்குத் தலைமை பொறுப்பில் இருந்தவர். 14 ஆண்டுகளாக அமெரிக்க உளவு துறையில் பணிபுரிந்த இவர், கடந்த 2023இல் அதில் இருந்து விலகினார். இதனால் இவர் கூறும் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த யுஎப்ஓ பூமியைச் சேர்ந்தது இல்லை என்றும் அமெரிக்க அரசு இதை ரகசியமாக வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "அவை பூமியைச் சேர்ந்தது இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.. சில வாகனங்கள் பூமியில் தரையிறங்கியது போல இருந்தன. சில யுஎப்ஓக்கள் பூமியில் மோதியது போல இருந்தன
என்ன சொன்னார்: யுஎப்ஓக்கள் குறித்த ரகசியத் தகவல்களை நாடாளுமன்றத்தில் ஒப்படைத்த பிறகு, எனது உயர் அதிகாரிகளே என்னைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் எனப் புரியவில்லை. இதன் காரணமாகவே நான் உளவுத் துறையில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன்.
இந்த யுஎப்ஓக்கள் குறித்த தகவல்களை அமெரிக்க நாடாளுமன்றம் வெளியுலகிற்குச் சொல்லாமல் மறைத்து வருகிறது. அதிகாரிகள் பலரும் என்னிடம் இது குறித்துப் பேசியுள்ளனர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் முதலில் அவர்கள் சொல்வதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. விளையாட்டாக என்னை ஏமாற்ற இப்படிச் சொல்கிறார்களோ என நினைத்தேன். இருப்பினும், அவர்கள் சொல்லச் சொல்ல இது எந்தளவுக்கு உண்மை என்பது எனக்குப் புரிந்தது" என்றார்.
உலகெங்கும் இருக்கு: இது குறித்து அமெரிக்காவின் நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ் சென்டரின் தற்போதைய உளவுத்துறை அதிகாரியான ஜொனாதன் கிரே கூறுகையில், "பூமிக்குச் சொந்தமில்லாத பொருட்கள் அமெரிக்காவிடம் இருப்பது உண்மை தான். இவை நம்மிடம் மட்டுமே இருக்கிறது எனச் சொல்ல முடியாது. இந்த வகையான பொருட்கள் அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இதுபோல பூமிக்குத் தொடர்பே இல்லாத பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications