டைட்டன் கப்பலில் ஏறவே அஞ்சிய பாக். தொழிலதிபரின் மகன்! கடைசி நேரத்தில் அப்பாவுக்காக எடுத்த முடிவு
வாஷிங்டன்: டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் உள்ளே பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில், அதில் பயணித்த பாக். தொழிலதிபரின் மகன் குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 1912ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது.. இதில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். இது கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மோசமான கப்பல் விபத்தாகக் கருதப்படுகிறது.
கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி உள்ள நிலையில், ஓஷன்கேட் என்ற நிறுவனம் அந்த பகுதிகளைக் காண டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறது.

விபத்து: கடந்த சில நாட்களுக்கு முன்பு டைட்டான் நீர் மூழ்கிக் கப்பல் 5 பேரை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதில் இருந்து வந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளே கடலில் அதீத அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியுள்ளது. இதில் உள்ளே பயணித்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் கொல்லப்பட்ட 5 பேரில் பாகிஸ்தான் நாட்டின் பெரும் தொழிலதிபர் ஷாஜதா தாவூத்தும் ஒருவர். அவர் தனது மகன் சுலேமான் தாவூத்துடன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த நிலையில், இருவருமே இந்த விபத்தில் உயிரிழந்தனர். இதற்கிடையே இந்த தொழிலதிபரின் மகன் சுலேமான் தாவூத் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தொழிலதிபரின் மகன் சுலேமான் தாவூத் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்லவே பயந்துள்ளார்.
தொழிலதிபர் மகன்: இருப்பினும், தந்தையர் தினத்தன்று தனது அப்பாவுடன் வெளியே செல்ல வேண்டும் என்பதால் அவர் இந்தப் பயணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக உயிரிழந்த பாகிஸ்தான் தொழிலதிபரின் சகோதரி ஷாஜதா தாவூத் கூறுகையில், "இந்த செய்தியை நம்பவே முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் இருவரை நாங்கள் இழந்துள்ளோம். சுலேமான் தாவூத் இதில் செல்லவே அஞ்சினான். இதில் அவனுக்கு விருப்பமே இல்லை. இருப்பினும், அவனது தந்தைக்கு டைட்டானிக் மீது அப்படியொரு ஆர்வம்.
தனது அப்பாவுடன் தந்தையர் தினத்தன்று வெளியே செல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே சுலேமான் தாவூத் இந்த பயணத்தை மேற்கொண்டான். ஆனால், துரதிருஷ்டவசமாக இப்படி ஆகிவிட்டது.. உலகில் அனைவருக்குமே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்: அவர்கள் என்ன சிரமத்தை எதிர்கொண்டிருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. எனக்கெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் நாங்கள் டைட்டான் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார். கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் சில நாட்களாகவே நடந்து வந்த நிலையில், அந்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
catastrophic explosion எனப்படும் அழுத்தம் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சம்பவத்தால் உள்ளே இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னரே வெடிப்பின் சத்தம் கேட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருப்பினும், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் டைட்டானிக் கப்பல் பாகங்கள் இருந்த இடத்தில் இருந்து 1600 அடி தூரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications