திடீரென கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி குவிக்கும் அமெரிக்க பெண்கள்.. இதற்கும் டிரம்ப் தான் காரணமாம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றுள்ள நிலையில், திடீரென அங்குக் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கருத்தடை மாத்திரை விற்பனை சுமார் 17 மடங்கு அதிகரித்துள்ளது. டிரம்ப் வந்ததும் ஏன் இந்தளவுக்குக் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு உண்மையில் என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், அந்நாட்டின் 47வது அதிபராக அடுத்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்க இருக்கிறார். இதற்கான பணிகளை அவர் ஆரம்பித்துள்ளார்.

முதற்கட்டமாக அவர் தனது கேபினட்டில் இருக்க போகும் அமைச்சர்களின் பெயர்களைத் தேர்வு செய்து வருகிறார். அதேநேரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதில் இருந்தே அமெரிக்காவில் வினோத சம்பவங்கள் நடக்கிறது.
பெண்கள்: ஒரு சில பெண்கள், டிரம்ப்பிற்கு அதிகளவில் வாக்களித்து வெல்ல வைத்த ஆண்களுடன் இனி உடலுறவு கொள்ள மாட்டோம் எனப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதேபோல இன்னும் சில பெண்கள் டிரம்ப் வெல்லக் காரணமாக இருந்த ஆண்களை எல்லாம் விஷம் வைத்துக் கொல்லப் போகிறோம் என்றும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே அங்குள்ள பெண்கள் திடீரென ஹார்மோன் கருத்தடைகள் மாத்திரைகள், கருக்கலைப்பு மருந்துகளை வாங்கி குவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விற்பனை அதிகரிப்பு: அமெரிக்காவில் மிகப் பெரிய கருக்கலைப்பு மாத்திரை விற்பனையாளரான எய்ட் அக்சஸ் என்ற நிறுவனம் தங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக டிரம்ப் வென்றவுடன் மட்டும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை வழக்கத்தை விட சுமார் 17 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல டெலிமெடிசின் மூலம் கருக்கலைப்பு மருந்துகளை வழங்கும் ஜஸ்ட் த பில் என்ற நிறுவனமும் கடந்த ஒரு வாரமாக தங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் என்பது அசாதாரண ஒன்று என்றும் அந்த நிறுவன சிஇஓ தெரிவித்தார்.
என்ன காரணம்: அமெரிக்காவில் இந்தத் தேர்தலில் கருக்கலைப்பு விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருந்தது. அந்நாட்டு உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பு என்பது நாடு தழுவிய பெடரல் உரிமை இல்லை என்று கடந்த 2022ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக டிரம்ப்பின் குடியரசு கட்சி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டன. டிரம்ப் காலத்தில் நாடு முழுக்க அவர் கருக்கலைப்பிற்குத் தடை விதிப்பார் என்று அங்குள்ள பெண்கள் அஞ்சுகிறார்கள். இதன் காரணமாக அங்குள்ள பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை மொத்தமாக வாங்கி குவித்து வருகிறார்கள்.
இது மட்டுமின்றி கருக்கலைப்பு மற்றும் அதற்கான மாத்திரைகள் குறித்த தகவல்களைப் பகிரும் பிளான் சி இணையதளத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் சுமார் 20 மடங்கு அதிகரித்துள்ளதாம். டிரம்ப் காலத்தில் கருக்கலைப்பு உரிமைக்கு நெருக்கடி வரலாம் என்பதால் அதற்கேற்ப மக்கள் தயாராகி வருவதாக பிளான் சி-இன் இணை நிறுவனர் எலிசா வெல்ஸ் கூறினார். கருத்தடை மாத்திரைகள் மட்டுமின்றி, கருத்தடை சார்ந்த மற்ற பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
என்ன நடக்கும்: அதேநேரம் டிரம்ப் நேரடியாகக் கருத்தடைக்குத் தடை விதிக்கும் வாய்ப்பு குறைவு என்றே அங்குள்ள வல்லுநர்கள் கூறுகிறார்கள். மாறாகக் கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வாங்க அல்லது அணுகுவதை கடினமாக்கக்கூடும்.. அதற்குக் கட்டுப்பாடுகளை அவர் விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications