வடகொரியா உள்ளே வந்தால் நோ லிமிட்.. முழுசா இறங்குங்கள்.. அமெரிக்கா தடாலடி.. உற்று பார்க்கும் ரஷ்யா!
வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் வடகொரிய வீரர்களை ரஷ்யா களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஒருவேளை வடகொரியா உள்ளே வந்தால் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உக்ரைன் நாட்டிற்கு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா சொல்லியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது நிலைமை மோசமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு பக்கம் இருக்க ரஷ்யா- உக்ரைன் இடையிலும் போரிலும் இப்போது பதற்றம் அதிகரித்து வருகிறது.

ரஷ்யா- உக்ரைன் மோதல்: கடந்த பல ஆண்டுகளாகவே ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் இருந்தே வந்தது. நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் தயாராகி வந்த நிலையில், கடந்த 2022ல் உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ரஷ்யா கை ஓங்கி இருந்தது. போர் சில வாரங்களில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உக்ரைன் திருப்பி அடிக்கக் கூடவே மேற்குலக நாடுகளும் உதவிக்கு வரப் போர் ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது.
வடகொரிய வீரர்கள்: இந்தச் சூழலில் ரஷ்யாவுக்காக உக்ரைனில் போரிட வடகொரிய வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது தொடர்பாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. அதில் வடகொரிய வீரர்கள் வரிசையில் நின்று ரஷ்ய ராணுவ யூனிபார்ம் வாங்குவதும், ரஷ்யாவில் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதும் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் விரைவில் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டது.
தொடக்கத்தில் இது தொடர்பான தகவல்களை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்தது. மேற்குலக நாடுகள் தங்கள் நாட்டை பற்றி திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புவதாகக் கூறியது. அதேநேரம் வடகொரியா வீரர்களின் வீடியோ வெளியான நிலையில், கடந்த வியாழக்கிழமை இது தொடர்பான கேள்விக்கு ரஷ்ய அதிபர் புதின் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா திட்டவட்டம்: வடகொரியா ரஷ்யா இடையே உள்ள கூட்டு ஒப்பந்தத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது ரஷ்யாவின் விருப்பம் எனத் தெரிவித்தது. மேலும், ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உதவினால், மாஸ்கோ அதற்கேற்ப பதிலளிக்கும் என்றும் தெரிவித்தார் இதற்கிடையே ரஷ்யாவின் போரில் வட கொரியா இணைந்தால், அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைன் நாட்டிற்கு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்க மாட்டோம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் கூறியுள்ளது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் மேலும் கூறுகையில், "ரஷ்யாவுக்கு வடகொரியா தொடர்ந்து தனது வீரர்களை அனுப்பி வருகிறது. சுமார் 10,000 வட கொரிய வீரர்கள் இப்போது கிழக்கு ரஷ்யாவில் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் ஏற்கனவே உக்ரைனுக்கு அருகில் சென்றுவிட்டனர். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா இந்த வீரர்களைப் பயன்படுத்தும் என்றே நினைக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஏன் முக்கியம்: ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆயுதங்கள் மிகப் பெரியளவில் உதவியாக இருக்கிறது. அதேநேரம் அந்த ஆயுதங்களை உக்ரைன் தனது இஷ்டத்திற்குப் பயன்படுத்த முடியாது. அதற்கும் கூட அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
இதன் காரணமாகவே ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைனால் தாக்குதல் நடத்த முடியாமல் இருக்கிறது. இந்தச் சூழலில் வடகொரியா இதில் உள்ளே வந்தால் ஆயுதங்களைப் பயன்படுத்த எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications