"இன்னும் 18 மாசம்.." குழந்தைகளிடம் நெருங்கும் ஏஐ கருவிகள்.. எப்படி தெரியுமா! பில் கேட்ஸ் நறுக்
வாஷிங்டன்: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் அது வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் தான் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக சாட் ஜிபிடி வருகை என்பது ஏஐ தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய மாற்றத்தைத் தொடங்கி வைத்துவிட்டது.

அப்போது தொடங்கி ஏஐ தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. நாம் கற்பனை கூடச் செய்து முடியாத அளவுக்குப் பல வேலைகளை இது நொடிகளில் செய்து அசத்தி வருகிறது.
எங்கு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பல்வேறு தளங்களில் மனிதர்களை விடச் சிறப்பாகச் செயல்படுமோ என்ற விவாதம் இதனால் எழுந்துள்ளது. மனிதர்கள் எதிர்கொள்ளும் பல தேர்வுகளை ஏஐ தொழில்நுட்பம் அசால்டாக க்ளியர் செய்வதை வைத்தே நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி பல போட்டி தேர்வுகளில் அசாட்லாக தேர்ச்சி பெறுவதே அது எந்தளவுக்குப் புத்திசாலித்தனமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்கும் அதே சூழலில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் திறனை எப்படி மேம்படுத்த முடியும் என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இதனிடையே உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். குழந்தைகள் கல்வியில் ஏஐ தொழில்நுட்பம் எப்படி உதவும் என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஏஐ தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அடுத்த 18 மாதங்களில் ஏஐ தொழில்நுட்பம் என்பது ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவும். மாணவர்கள் கற்றல் திறன் எப்படி இருக்கிறது.. அவர்கள் எப்படிப் படிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய இது உதவும்.. அடுத்த 18 மாதங்களில் ஏஐ தொழில்நுட்பம் ஆசிரியரின் உதவியாளராக மாறும்.
குறிப்பாகக் கணித பாடங்களில் அது நிச்சயம் நமது மாணவர்களுக்கு உதவும்.. ஆசிரியர்களின் பணியையும் அது எளிமையாக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். இது போல கற்றலுக்கு உதவும் ஏஐ தொழில்நுட்பங்கள் நிச்சயம் இலவசமாக இருக்காது. அதற்கு நாம் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

கட்டணம் செலுத்தினாலும் கூட அது வழக்கமாக டியூஷனுக்கு அளிக்கும் தொகையை விடக் குறைவாகவே இருக்கும் என்று கேட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இப்போது நம்மிடம் மிகச் சிறந்த கருவிகள் உள்ளன. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் நாம் கணித துறையில் அடைந்த வளர்ச்சியைக் காட்டிலும் வேகமாக அடுத்து வரும் காலத்தில் வளர்வோம். இது நமக்குப் பெரியளவில் உதவவே போகிறது" என்றார்.
பில் கேட்ஸ் எப்போதுமே ஏஐ தொழில்நுட்பத்தை வரவேற்றே பேசி வருகிறார். சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தைத் தொடக்கம் முதலே பாராட்டி வரும் பில் கேட்ஸ், நமது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் இந்த சாட் ஜிபிடி தான் காரணமாக இருக்கும் என்றும் அவர் கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications