'திருப்பு முனை' வரலாற்றில் முதல் முறையாக தேனீக்களுக்கு வேக்ஷின்..ரொம்பவே முக்கியமாம்..ஏன் தெரியுமா?
வாஷிங்டன்: உலக வரலாற்றில் முதல் முறையாக தேனீக்களுக்கான தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. நிபந்தனை அடிப்படையில் இந்த அனுமதியானது கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் வாழும் இந்த பூமிப்பந்தில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. நிலத்திலும் நீரிலும் வாழும் அனைத்து உயிரினங்களும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக உள்ளது.
அதுவும் பூச்சியினங்கள் இந்த உலகம் தளைத்து நிற்க மிகவும் இன்றிமையாததாகும். தாவரங்களில் நடைபெறும் அயல் மகரந்த சேர்க்கைக்கு இந்த பூச்சியினங்களே உறுதுணையாக இருக்கின்றன.

தேனீக்கள் அழிந்து போனால்..
தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் என எண்ணற்ற பூச்சியினங்கள் இந்த பூமியில் வாழ்கின்றன. பூச்சியினங்களில் தேனீக்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. தேனீக்கள் அழிந்து போனால் இந்த உலகில் மனித இனமே அழிந்து போகும் என்று கூட சொல்லப்படுவதுண்டு. மகர்ந்தசேர்க்கை அதன் மூலம் உணவு உற்பத்தி பெருக்குவதற்கு தேனீக்கள் பங்கு இன்றியமையாதது. ஆனால், தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள், தேனீக்கள் உள்ளிட்ட பூச்சியினங்களுக்கும் ஆபத்தாகவே மாறி வருகின்றன. இது தவிர சில நோய்களும் தேனீக்களுக்கு அபாயகரமானதாக உள்ளது.

தேனீக்களுக்கான தடுப்பு மருந்து
இந்த நிலையில், உலக வரலாற்றில் முதல் முறையாக தேனீக்களுக்கான தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. நிபந்தனை அடிப்படையில் இந்த அனுமதியானது கொடுக்கப்பட்டுள்ளது. தேனீக்களுக்கான தடுப்பூசியை அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான தலன் அனிமல் ஹெல்த் (Dalan Animal Health) உருவாக்கியுள்ளது. தேனீக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நோய்தொற்றான American Foulbrood disease- இல் இருந்து தேனீக்களை இந்த தடுப்பு மருந்து பாதுகாக்கும் என்று தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக அளவு விளைச்சலை கொடுக்க
இது தொடர்பாக தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ள நிறுவனம் கூறுகையில், "தேனீக்களை பாதுகாப்பதில் எங்கள் தடுப்பு மருந்து பெரும் திருப்பு முனையாக இருக்கும். மகரந்த சேர்க்கையை பாதுகாத்து நீடித்த வேளாண் உற்பத்தியை ஊக்குவிப்பதில் புதுமையான தீர்வுகளை காண்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் உணவு விநியோகத்தை பாதுகாப்பதற்கு தேனீக்களின் மகரந்த சேர்க்கை முக்கியமான ஒன்றாகும். உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு விநியோகம் மகரந்த சேர்க்கையை சார்ந்தே உள்ளது. எனவே பயிர்கள் அதிக அளவு விளைச்சலை கொடுக்க தேனிக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது" என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்
தற்போதுவரை இந்த நோய் பாதிப்பு இருந்தால் தேனீக்கள் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டிகளை தீ வைத்து எரிக்கும் முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு நிபந்தனைகள் அடிப்படையில் தேனீக்களுக்கான தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா விவசாயத்துறை அனுமதி கொடுத்துள்ளது. வணிக நோக்கத்தில் தேனீக்களுக்கு வரம்பிற்கு உட்பட்டு விநியோகிக்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த தடுப்பூசிகள் சந்தைகளில் விற்பனைக்கு வரும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு சக்திகள் கிடைத்து விடும்
இந்த தடுப்பு மருந்து வேலைக்கார தேனீக்கள் சேகரிக்கும் உணவுப் பொருட்களில் கலந்து வைக்கப்படும். இந்த வேலைக்கார தேனீக்கள் இதனை சேகரித்து தேன் கூட்டில் இருக்கும் ராணி தேனீக்கு வழங்கும். இதை உட்கொள்ளும் ராணி தேனீக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பின்னர் இனப்பெருக்கத்தின் போது தேனீக்களுக்கு Foulbrood disease- நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்திகள் கிடைத்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications