லோக்சபா தேர்தல் வரை இப்படித்தான் திமுகவினர் மீது ரெய்டுகள் தொடரும்! நடக்க போவது இதுதான்?
சென்னை: லோக்சபா தேர்தல் வரை இப்படித்தான் திமுகவினர் மீது ரெய்டுகள் தொடரும் என்றே அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இவர் தொடர்ந்து பெயில் மறுக்கப்பட்டு சிறையிலேயே உள்ளார்.
பொன்முடி மீதான ரெய்டு: சமீபத்தில் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது.
தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
இப்படிப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளானார். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜெகத்ரட்சகன் ரெய்டு; இது போக திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடந்தது. வருமான வரித்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
2019 லோக்சபா தேர்தலில் நிற்கும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக 110 கோடி ரூபாய் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கணக்கு காட்டினார். அதோடு தனக்கு மனைவிற்கு 43 கோடி ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக புகார் வைக்கப்படுகிறது. வருமான வரித்துறை சந்தேகம் அடைந்தது.
முக்கியமாக அவரின் மருத்துவ கல்லூரிகள் மூலமாக அதிக அளவு வருமானம் கணக்கின்றி வந்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றுள்ளதாம். அவருக்கு சொந்தமாக 15+ கல்லூரிகள் உள்ளன. இதில் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன.
இங்கிருந்து முறையின்றி கூடுதல் வருமானம் வந்ததாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையிலேயே ரெய்டு நடந்தது. ஏற்கனவே அமலாக்கத்துறை இவருக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அவர் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதில் அவர் வருமான வரித்துறை மூலம் ரெய்டு செய்யப்பட்து.
ஏ வ வேலு ரெய்டு: இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது 5வது நாளாக ஏ வ வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் எ.வ வேலு இடங்களில் ஐந்தாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் ஐந்தாவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது.
தொடரும் ரெய்டுகள்: லோக்சபா தேர்தல் வரை இப்படித்தான் திமுகவினர் மீது ரெய்டுகள் தொடரும் என்றே அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதோடு ரெய்டுகள் முடியாமல் இன்னும் சில மூத்த அமைச்சர்கள் ரெய்டுகளில் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக லோக்சபா தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு பணம் கொடுக்க வாய்ப்புள்ள நபர்கள், பணம் புரட்ட தகுதியான அமைச்சர்கள், தனியாக தொழில் செய்யும் அமைச்சர்கள் குறி வைக்கப்பட்டு திமுகவின் தேர்தல் பணிகளை முடக்க டெல்லி பிளான் போட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications