Sirai movie identity: ‘சிறை’ படம் ஏன் இவ்வளவு பேசப்படுகிறது தெரியுமா? இதுதான் காரணம்!
சென்னை: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்ற திரைப்படம் 'சிறை'. அந்த படம் இப்போது ஓடிடியில் வெளியாகிய பிறகு, இன்னும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் வசூல் இல்லை. விளம்பரம் இல்லை. படம் பேச வைத்தது அதில் சொல்லப்பட்ட விஷயம்.
வாழ்க்கையில் எந்த டிபார்ட்மெண்ட் எடுத்தாலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். அதற்காக ஒரு துறையையே ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்லிவிட முடியாது என்ற ஒரு சாதாரண உண்மையை, இந்த படம் மிகவும் அமைதியாகவும் அழுத்தமாகவும் சொல்லுகிறது.
வழக்கமாக தமிழ் சினிமாவில் காவல் நிலையம் என்றால் அலங்கரிக்கப்பட்ட வசனங்கள், வீராவேசமான போலீஸ்கள், நீதிமன்றம் என்றால் நாடகத் தன்மை கொண்ட காட்சிகள் - இப்படித்தான் நமக்கு காட்டப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் போலீஸ் ஸ்டேஷனுக்கும், நீதிமன்றத்துக்கும் நேரில் போய் வந்தவர்கள், அங்குள்ள பேச்சும் நடைமுறையும் சினிமாவிலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பதையும் அறிவார்கள். அந்த நிஜத்திற்கு மிக நெருக்கமாக 'சிறை' படம் நகர்கிறது.

கதையின் மையம்
படத்தின் கதை மிகவும் எளிமையானது. ஒரு கொலைக்குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மூன்று காவல் அதிகாரிகள் நீண்ட தூரம் பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் மொத்த படம்.
போலீஸ் என்றாலே அதிகாரம், வசதி, பாதுகாப்பு என்று நினைப்பவர்களுக்கு, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் அழுத்தங்கள், பயங்கள், குடும்பப் பிரச்சினைகள் அனைத்தையும் காட்சி காட்சி ஆக படம் காட்டுகிறது. அதே நேரத்தில் காவல்துறைக்குள் இருக்கும் நல்ல போலீஸும், மனிதநேயமே இல்லாத போலீஸும் இருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
பெயரும் மதமும்
இந்த படத்தின் முக்கியமான பகுதி, ஒருவருடைய பெயரும் மத அடையாளமும் அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பலர் ஆண்டுக் கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதைக் குறித்து படம் பெரிய உரையாடலுக்குள் செல்லவில்லை. ஆனால் ஒரு வசனம் போதும் என்ற அளவுக்கு விஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறது.
"Gun ஏன் லோடாக இருக்கு?, சார்... அவன் முஸ்லிம் சார்..." இந்த வசனம் ஒரு காலகட்டத்தின் மனநிலையை அப்படியே நினைவுபடுத்துகிறது.
அதுபோல படத்தில் வரும் ஒரு காட்சி தற்போது அதிகமாக பேசப்படுகிறது. நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் விசாரணைக் கைதிக்கு தப்பிச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவன் தப்பிக்கவில்லை.
அதற்கு அவன் சொல்கிற வசனம், "அப்துல் ரவூஃப்ன்ற பேரை வச்சுக்கிட்டு நான் எங்க சார் தப்பிச்சுப் போய்ர முடியும்? என்று உருக்கமாக பேசியிருப்பார்.

நீதித்துறையை மனிதநேயமாக காட்டும் காட்சி
படத்தில் வரும் நீதிபதி கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்கது. கைதியின் கதையை கேட்ட பிறகு, "ஐந்து ஆண்டுகளாக உங்களுடைய வழக்கை எடுத்தே விசாரிக்காததற்கு நீதித்துறையின் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்று அவர் கூறும் காட்சி, பலரையும் அமைதியாக்கியது.
நீதித்துறையில் இப்படியும் மனிதநேயமான அணுகுமுறை இருக்க முடியும் என்பதை அந்த ஒரே காட்சி சொல்கிறது. அதேபோல அந்த நீதிபதி மாறிய பிறகு அதே இடத்தில் வரும் இன்னொரு நீதிபதி இந்த வாழ்க்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்று கறாராக பேசுவது இந்தத் துறையிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் இதுபோல அடுத்தவர்களின் உணர்வுகளையும், சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

இந்த படத்தின் பின்னணி சக்தியாக இருப்பவர் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி. மத அடையாளங்கள், அரசு துறைகளின் சீர்கேடு, அதிகாரத்தின் அலட்சியம் போன்ற நுட்பமான விஷயங்களை எந்த இடத்திலும் பிரச்சாரமாக மாற்றாமல், கதையின் ஓட்டத்திலேயே அவர் சொல்லியிருக்கிறார். அந்த தைரியம்தான் 'சிறை'யை சாதாரண சமூகப் படத்திலிருந்து வேறுபடுத்துகிறது.
விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக தனது கதாபாத்திரத்தை நிதானமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, காதலி, நீதிபதி உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களும் தங்கள் இடத்தை சரியாகப் பிடித்திருக்கின்றன. திரையரங்குகளில் கவனம் பெற்ற இந்த படம், தற்போது ஓடிடியில் வெளியாகி இன்னும் அதிகமான பார்வையாளர்களை அடைந்துள்ளது.
"இதை தியேட்டரில் எப்படி மிஸ் பண்ணினோம்?" என்று பலர் கேட்கும் அளவுக்கு, படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மொத்தத்தில் 'சிறை' ஒரு பொழுதுபோக்கு படம் அல்ல. அரசு துறைகளின் செயல்பாடுகள், சமூகப் பாகுபாடு, சராசரி மனிதனின் போராட்டம் ஆகியவற்றை அமைதியாக ஆனால் அழுத்தமாக பேசும் ஒரு படம். அதனால்தான், ஓடிடியில் வெளியான பிறகும் 'சிறை' பற்றிய விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications