விடுதிக்குள் அத்துமீறி புகுந்து ‘பாலியல் கல்வி’ கற்றுத் தந்த அரசு அதிகாரி.. மாணவிகள் பரபரப்பு புகார்
பெங்களூரு: கர்நாடகாவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து பாலியல் கல்வி கற்றுத் தருவதாக தொல்லை கொடுத்ததாக மாவட்ட சமூக நல அதிகாரி மீது மாணவிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது ராமநகரா. இங்கு மாநில அரசுக்கு சொந்தமான மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு தங்கியிருக்கும் மாணவிகளில் பெரும்பாலானோர், பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த வாரம், இந்த விடுதி மாணவிகள் சேர்ந்து கர்நாடக மாநில பெண்கள் ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்தனர். அப்புகாரில் அம்மாவட்ட சமூக நல அதிகாரியாக பணியாற்றும் நாகராஜப்பா என்பவர் மாணவிகளின் விடுதிக்குள் இரவு நேரங்களில் புகுந்து மாணவிகளிடம் பாலியல் கல்வி குறித்து அத்துமீறிப் பேசியதாகக் கூறப்பட்டிருந்தது.
மாணவிகள் அளித்த புகாரையடுத்து கடந்த புதன்கிழமை அந்த விடுதியில் மகளிர் ஆணைய தலைவர் மஞ்சுளா விசாரணை நடத்தினார். அப்போது, நாகராஜப்பா விடுதி மாணவிகளைக் குழுவாகக் கூட்டி பாலியல், திருமண வாழ்க்கை, காதல் மற்றும் ஆண் நண்பர்கள் பற்றி பேசியது உறுதி செய்யப்பட்டது.
மேலும், விடுதியில் இருந்த சிலர் நாகராஜப்பாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தனக்குள்ள அதிகாரத்தை வைத்து விடுதியின் வார்டனையும் மிரட்டி நீண்ட காலமாக, நாஜராஜப்பா இப்படி செய்து வந்துள்ளார். மேலும் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பற்றி விசாரித்து அவர்களை தொட்டுப்பேசி தவறாக நடந்து கொள்ளவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் மாநில மகளிர் ஆணையம் விசாரணை முடியும் வரை நாகராஜப்பாவை பணியிடை நீக்கம் செய்ய கர்நாடக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது நாகராஜப்பா மீது தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications