ஜெ., அனுப்பிய பெட்டி..காரோடு எரிச்சுருவேன்! கட்சி எம்பியை அதட்டிய ராமதாஸ்! நிர்வாகி சொன்ன சீக்ரெட்.!
சென்னை: பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இது கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது என்பதையே காட்டுகிறது எனவும், அன்புமணி தான் எதிர்கால தலைவர் என கூறியுள்ளார் பாமக நிர்வாகியான டாக்டர்.சாம் பால். மேலும் ஜெயலலிதாவுக்கு பயப்படாதவர் ராமதாஸ் எனவும், ஜெயலலிதா கொடுத்த பணத்தை காரோடு எரிப்பேன் என கூறியவர் என ஒன் இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு விவகாரங்கள் நடந்திருந்தது,

இருந்த போதும் கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவு காரணமாகவே ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டது அவரது செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் ஓரளவு இடங்களை பெற்று இருக்கலாம் என ராமதாஸ் நினைத்த நிலையில் அவர் பேச்சை மீறி அன்புமணி பாஜக கூட்டணிக்கு சென்றது தான் இந்த பிரச்சனைக்கு எல்லாம் மூலக் காரணம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பாமகவின் இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாகவும் தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாஸின் பேச்சு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்குப் பிறகு தைலாபுரத்தில் நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தை பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்தனர். தொடர்ந்து தந்தையும் மகனும் பேட்டி கொடுத்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இதற்கிடையே பாமகவில் ஜனநாயகம் இருப்பதால்தான் இப்படி பேச முடிகிறது என்றும் அன்புமணி தான் கட்சியின் எதிர்காலம், ராமதாஸ் பணத்திற்கு விலை போகாதவர் எனக் கூறியிருக்கிறார் பிரபல தொழிலதிபரும் பாமக முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான டாக்டர்.சாம் பால் ஒன் இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்த அவர்," மாநாடு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். சொல்லப்போனால் எங்கள் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. அதனால் தான் ஒருவர் கூறுவர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேச முடிகிறது.
பிற கட்சிகளை போல பாமக இல்லை. சமூகநீதி என்ற ஒற்றை இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் இன்று வரை தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக பாமக இருக்கிறது. அதேபோல ராமதாஸ் ஐயா அவர்களும் யாருக்கும் அஞ்சாதவர். எந்தவித சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்டவர். 1991 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு தமிழகத்தில் விடுதலைப்புலிகள், எல்டிடிஇ, பிரபாகரன் என பேசினாலே சிறை தான் என ஜெயலலிதா மிரட்டினார்.

ஆனால் அப்போதே 40க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். என்னையும் எனது மகனையும் வேண்டுமானாலும் கைது செய்யுங்கள். ஆனால் கூட்டம் நடத்துவதை நிறுத்த மாட்டோம் என வெளிப்படையாக பேசியதோடு, கூட்டத்தையும் நடத்தி காட்டியவர். 2001 ஆம் ஆண்டு தேர்தலின் போது பாமக தேர்தலில் போட்டியிட்டது.
அப்போது ஜெயலலிதா ராமதாஸை தொடர்பு கொண்டு 4, 5 தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெறுவது போல இருக்கிறது. தேர்தல் செலவுக்கு பணம் வைத்துக் கொள்ளுங்கள் என ஒரு குறிப்பிட்ட தொகையை அப்போது எம்பியாக இருந்தவரும், தற்போது ஒரு கட்சியின் தலைவராக இருப்பவரிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் இதனை கேட்ட ராமதாஸ் கோபத்தில் கொந்தளித்து,"கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் பத்து நிமிடத்தில் புதுச்சேரி வந்து விடுவேன். அதற்குள் அந்த பணம் திருப்பி சென்றிருக்க வேண்டும். இல்லை என்றால் காரையும், உன்னையும், அந்த பணத்தையும் எரித்து விடுவேன்" என பேசினார். இப்படி பணத்துக்கும் சரி அதிகாரத்திற்கும் சரி அடிபணியாதவர் ராமதாஸ். எங்கள் கட்சியில் நடப்பது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications