பயங்கரவாதத்தை அறவே ஒழிக்க கடுமையாக பாடுபடுகிறோம்.. ஜம்மு காஷ்மீர் டிஜிபி பேச்சு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காவல்துறையில் புதிதாக சேர்ந்தவர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில காவல்துறை டிஜிபி, ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதம் இல்லாத பகுதியாக மாற்ற பாடுபடுவதாக கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் காவல்துறை பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, தலைமை விருந்தினராக பங்கேற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த அடிப்படை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 510 கான்ஸ்டபிள்ஸ் அணிவகுப்பு நடத்தினர்.

இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் மனோஜ் சின்கா ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பரமுல்லா மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தலைவர் சஃபீனா பெய்க், உள்துறை நிதி ஆணையர் (கூடுதல் செயலாளர்) ஆர்.கே கோயல், ஆளுநரின் முதன்மை செயலாளர் மன் தீப் குமார் பண்டாரி, டிஜிபி (சட்டம் ஒழுங்கு) ஏகே சவுத்ரி, உதவி ஆணையர்கள் ஜே.எம். கிலானி, எம்.கே சின்கா, விஜயகுமார், உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது பணியின் போது உயிர் தியாகம் செய்த தியாகி ஹிமாயுன் முஸ்சம்மில் உள்பட பிற தியாகிகளுக்கு ஆளுநர் மனோஜ் சின்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வரவேற்புரை நிகழ்த்திய டிஜிபி, ஆளுநர் மனோஜ் சின்கா உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், 11 மாதங்கள் கடுமையான பயிற்சியை நிறைவு செய்த காவல்துறையினருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து விருது பெற்ற ஜவான்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து டிஜிபி கூறுகையில், தற்போது பயிற்சியை நிறைவு செய்துள்ள இந்த பேட்ச் கர்மயோகி பயிற்சி திட்டம் உள்பட பயிற்சியின் சமீபத்திய முறைகளை கையாண்டு பயிற்சி பெற்றுள்ளனர். காவல்துறையினருக்கு பயிற்சி என்பது மிகவும் அவசியமானது. இந்த ஆண்டு மட்டும் 14 ஆயிரம் காவலர்கள் பல்வேறு விதமான பயிற்சியை பெற்றுள்ளனர்.
1,800 போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக இவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். குற்ற புலனாய்வு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள 799 காவலர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2,500 காவலர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்களை கையாளும் விதமாக பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் பிற பாதுகாப்பு படைகளின் கூட்டு நடவடிக்கை காரணமாக அமைதி திரும்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் போலீசாரின் பணியை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா ஆகியோர் பலமுறை பாராட்டியுள்ளனர். இது எதிரிகளுக்கு எதிரான சண்டையின் போது ஊக்கமளிக்கும் விதமாக படையினருக்கு அமைந்துள்ளது. மாறி வரும் சூழலில் ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதம் இல்லாத மாநிலமாக மாற்ற இரவு பகலாக பாடுபட்டு வருகிறோம்.
21 காவல் நிலையங்களில் காவல்துறையின் செயல்பாட்டுத் திறனைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. எஞ்சிய பயங்கரவாதத்தையும் ஒழிக்க நவீன கருவிகள் உள்பட பல வசதிகள் வழங்கப்படு இருக்கிறது. மேலும் 22 காவல் நிலையங்களையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வந்து எஞ்சியிருக்கும் பயங்கரவாதத்தையும் முற்றிலும் ஒழிக்கப்படுவது உறுதி செய்யப்படும். காவல்துறையினரின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசர் பல்வேறு ரேங்கிற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications