பெரியார் உடைத்தது பிள்ளையார் சிலையை... சுடலைமாடன் சிலையை அல்ல..இதுதான் பேரா. தொ.பரமசிவன் பார்வை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளை உள்வாங்கி தமிழ் மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும் என நீண்ட நெடும் பாடத்தை தன்வாழ்நாள் எல்லாம் நடத்திக் கொண்டே இருந்தவர் மறைந்த பேராசிரியர் தொ. பரமசிவன்.

தந்தை பெரியாரை கொண்டாடியவர்.. தந்தை பெரியாரின் நினைவுநாளிலேயே தன் வாழ்க்கையை நிறைவு செய்துவிட்டு நம்மிடம் இருந்து பிரிந்திருக்கிறார்.

தந்தை பெரியார் தமிழர் தொன்மங்களை எதிர்த்தார்; கடவுளை எதிர்த்தார் என்கிற தட்டையான வாதங்களை நிராகரித்து பெரியாரை தமிழ்ச் சமூகம் எப்படி பார்க்க வேண்டும் என ஒரு பாடத்தையே இந்த மண்ணுக்கு தந்தவர் பெருந்தகையாளர் பேராசிரியர் தொ. பரமசிவன்.

Prof Tho Paramasivans view on Thanthai Periyar

2012-ம் ஆண்டு கீற்று இணையதளத்துக்காக தொ. பரமசிவன் அளித்த நீண்ட நெடிய நேர்காணலில் தந்தை பெரியார் குறித்த கேள்விக்கு தொ. பரமசிவன் அளித்த தெளிந்த நீரோடை போன்ற ஆய்வார்ந்த பதில்:

பெரியாரைக் கொண்டாடுவது அறிவுலகத்துக்கு அடையாளம் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. மார்க்சியவாதிகள் கூட பெரியாரைக் கொண்டாடினார்கள். பகுத்தறிவின் சிகரம் பெரியார் என்று சொல்லி 1954ல் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ஐயங்கார் புத்தகம் எழுதினார். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டது போல, இந்த பத்து ஆண்டுகளில் பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப் போய்விட்டது. பெரியார் மீதான விமர்சனத்துக்குப் பெரியாரின் ஆளுமை இன்னமும் ஒரு நூற்றாண்டிற்குத் தாங்கும்.

பெண் உரிமை பற்றி வாய்கிழியப் பேசுகிற கூட்டம் கூட பெரியாருடைய தாலி நிராகரிப்பு பற்றிப் பேசுவதில்லை. வட இந்தியப் பெண்கள் இயக்கத்தில் கூட 'தாலியை நிராகரியுங்கள்' என்று யாரும் சொன்னதில்லை. பெரியார், கடவுளை மட்டும் அல்ல, தாலியையும் நிராகரியுங்கள் என்று வலியுறுத்தினார். ஆனால் அதைப் பற்றிப் பேசவோ சிந்திக்கவோ யாரும் தயாராக இல்லை. ஆனால், பெரியாரைப் பழிக்கிறது என்பது ஒரு நாகரிகம் (Fashion) ஆகிவிட்டது. அந்த வகையிலே தான் தொன்மங்களைப் பற்றி பேசுகிறார்கள். பெரியாரினால் தொன்மங்கள் காணாமல் போய்விட்டது என்று கூறுவது தவறு.

பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும் தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத் தானே உடைத்தார்; சுடலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன், காத்தாவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. பெரியார் தொன்மங்களைக் காலி செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தொன்மங்கள் இன்றைக்கும் உயிரோடு இருக்கின்றன. பெரியாரைப் பற்றியே நிறைய தொன்மங்கள் வந்துவிட்டன‌.

பெரியார் வாழ்ந்த காலத்தின் சூழல் வேறு; இன்றைக்கு இருக்கும் காலம் வேறு. பெரியாருக்குப் பிறகு உலகம் முப்பது ஆண்டுகள் சுற்றியிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய அறிவியல் கருவிகள் எவ்வளவு வந்திருக்கிறது! இதை வைத்துக் கொண்டு பெரியாரை அளக்க முற்படுவோம். பெரியாருக்கு அப்புறம் பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறது. பெரியாரே இருந்தால் இன்றைய பெண்கள் அடைந்து இருக்கும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவார். பெண்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்று நம்புகிறார்கள். இன்னமும் நம்முடைய பெண் தெய்வங்களின் கையில் இருக்கிற ஆயுதத்தைத் தூக்கிப் போட யாருக்கும் தைரியம் வரவில்லை. அது தான் போர்க்குணம். அதுதான் பண்பாடு.

பெரியார், நாட்டார் தெய்வங்களை எதிர்க்கவில்லை. காளியம்மன், மாரியம்மனை எதிர்க்கவில்லை. இந்த நாட்டார் தெய்வங்கள் ஒவ்வொரு மனிதனின் இரத்த ஓட்டத்திலும் கலந்த விஷயம். மழை வேண்டுமென்றால் மாரியம்மனுக்கு மழைக்கஞ்சி எடுக்க வேண்டும். இது நம்பிக்கை; மூட நம்பிக்கை இல்லை. நாட்டார் தெய்வங்கள் என்பவை அதிகார மையங்கள் அல்ல; காமாட்சி அம்மனைப் போல, மீனாட்சி அம்மனைப் போல அதிகார மையத்தைச் சார்ந்த தெய்வங்கள் அல்ல.

நாட்டார் தெய்வத்திலே தெய்வத்திற்கும் மனிதனுக்கும் குறுக்கே நிற்கிற அதிகாரம் எவ்வளவு நேரம்? சாமி ஆடும் நேரம் மட்டும் தான். அந்த பத்து நிமிடம் சாமி ஆடுவான். அந்நேரம் தான் அவனுக்கு அதிகாரம். அதற்குப் பிறகு அவனும் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு மற்றவர்களோடு வேலைக்குக் கிளம்பிவிடுவான். நாட்டார் தெய்வங்கள் ஜனநாயகத் தன்மை வாய்ந்தவை. நான் என்ன சாப்பிடுகிறேனோ அதைச் சாப்பிடுவது தானே என் தெய்வம். இதுவும் ஒரு உயர்தர சமத்துவம் தானே! நான் பன்றிக் கறி சாப்பிட்டால் என் தெய்வமும் பன்றிக் கறி சாப்பிடணும். நான் ஆட்டுக்கறி சாப்பிட்டால் என் தெய்வமும் ஆட்டுக்கறி சாப்பிடணும். நான் ரோட்டிலே சாப்பிட்டால் என் தெய்வமும் ரோட்டில் சாப்பிடணும். இந்த தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும்?

சில பெரிய சாதிகளுக்கு மட்டும் தான் வரையறுக்கப்பட்ட தெய்வங்கள் உண்டு. மாரியம்மன் எந்த சாதியின் தெய்வம்? ஒரு காலத்தில் மாரியம்மன் உழவுத் தொழில் செய்தவனுடைய தெய்வம். இன்றைக்கு மழை வேண்டுபவர்களுக்கெல்லாம் மாரியம்மன் தெய்வம். எல்லா தெய்வங்களையும் அப்படி சேர்க்க முடியாது. சில சில தெய்வங்கள் வட்டாரம் சார்ந்திருக்கிறது; சாதியைச் சார்ந்திருக்கிறது. இவ்வாறு தொ. பரமசிவன் அதில் தெரிவித்திருக்கிறார்.

படம்: தந்தை பெரியாருடன் பேராசிரியர் தொ. பரமசிவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+